ஆளுநருக்கு எதிரான உத்தரவு இருக்கட்டும்.. ஜெயலலிதா பெயரை காக்க போராடிய திமுக அரசு.. அரசியல் நகைமுரண்!
சென்னை: நேற்று ஆளுனர் ஆர். என் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சரமாரியான தீர்ப்புகளை வழங்கியது. பல்வேறு மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர் காலம் தாழ்த்தியதை விமர்சிக்கும் விதமாக கடுமையான நடவடிக்கைகளை, அறிவிப்புகளை உச்ச நீதிமன்றம் வெளியிட்டது.
ஆளுநர் ரவி நிறுத்தி வைத்த, திருப்பி அனுப்பிய மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாக கொள்ளப்படும்.. 10 மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாக கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்ற சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆளுநர் அனுப்பிய மசோதாக்கள் மீதான ஜனாதிபதியின் நடவடிக்கையும் செல்லாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

என்னென்ன மசோதாக்கள்
டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக மசோதா
டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழக மசோதா
வேளாண்மைப் பல்கலைக் கழக மசோதா
தமிழ் பல்கலைக் கழக இரண்டாவது திருத்த மசோதா
மீன்வள பல்கலைக் கழக மசோதா
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக மசோதா
தமிழ்நாடு பல்கலைக் கழகங்கள் இரண்டாவது திருத்த மசோதா
தமிழ்நாடு மீன்வள பல்கலைக் கழக மசோதா
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக மசோதா
தமிழ்நாடு பல்கலைக் கழகங்கள் மசோதா ஆகிய மசோதாக்கள் இன்று நிறைவேற்றப்பட்டு உள்ளன.
ஜெயலலிதா பெயரை காக்க மசோதா
இந்த தீர்ப்பை நேற்று அதிமுக கொண்டாடவில்லை. அதிமுகவினர் யாரும் பெரிதாக வரவேற்கவில்லை. முன்னாள் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் யாரும் வரவேற்று அறிக்கை வெளியிடவில்லை. ஆனால் இந்த தீர்ப்பில் அதிமுகவினர் கொண்டாட வேண்டிய முக்கிய அம்சம் ஒன்றும் உள்ளது.
ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான சட்ட மசோதா மீதும் ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் இருந்தார். அதையும் சேர்த்துதான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடத்தி உத்தரவு பெற்றிருக்கிறது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு. இதன் மூலம் அவரின் பெயரில் பல்கலைக்கழகம் அமையும் சட்டம் நிறைவேற்றப்பட்டு.. விரைவில் பல்கலைக்கழகம் அமையும் சூழல் உள்ளது.
வழக்கு பின்னணி
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவிக்கும், ஆளும் திமுக தரப்பிற்கும் பல்வேறு விவகாரத்தில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. தொடக்கத்தில் நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி ஏற்றுக்கொள்ளாதது இரண்டு தரப்பு மோதலுக்கும் முக்கிய காரணமாக அமைந்தது. அதேபோல் 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு இருப்பதும் கடுமையான விமர்சனங்களை சந்தித்து உள்ளது.
முக்கியமாக பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்திலும் ஆளுநர் ரவி - தமிழ்நாடு அரசு இடையே மோதல் நிலவி வந்தது. பல்கலைக்கழக வேந்தராக முதல்வரை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றி உள்ளது. ஆனால் இதை ஆளுநர் ஆர்.என் ரவி ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த மசோதாவை இன்னும் அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை. கடந்த சில மாதங்களுக்கு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு நீலகிரியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்தது. தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கலந்து கொள்ளும் இந்த மாநாடு ஆளுநர் மாளிகையில் நடந்ததும், அதை ஆளுநர் தொடங்கி வைத்ததும் திமுக தரப்பில் புகைச்சலை ஏற்படுத்தியது.
இதற்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அழைக்கப்படாததும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் சமீபத்தில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்ந்தெடுக்க, தமிழ்நாடு ஆளுநர் ரவி அமைத்த குழு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மீண்டும் சர்ச்சை: அதன்படி சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர்களை தேர்வு செய்ய குழு அமைத்து ஆளுநர் உத்தரவிட்டார். தமிழக அரசின் எதிர்ப்பை மீறி யுஜிசி சார்பில் உறுப்பினரையும் இந்தக் குழுக்களில் சேர்த்து ஆளுநர் ரவி நியமித்தார்.
இந்த நிலையில்தான் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போடுவது, துணைவேந்தர்கள் நியமனத்தில் குறுக்கீடு உள்ளிட்டவைகளை முன்வைத்து இந்த வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கில் ஆளுநர் ரவி நிறுத்தி வைத்த, திருப்பி அனுப்பிய மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாக கொள்ளப்படும்.. 10 மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாக கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்ற சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆளுநர் அனுப்பிய மசோதாக்கள் மீதான ஜனாதிபதியின் நடவடிக்கையும் செல்லாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இந்த உத்தரவு மூலம் பல்கலைக்கழகங்களின் வேந்தரானார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு பல்கலை. சட்டத் திருத்த (2வது) மசோதா உட்பட 10 மசோதாக்களுக்கு உச்சிநீதிமன்றம் ஒப்புதல் அளித்திருப்பதால் ஆளுநருக்கு பதிலாக மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் இனி பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுவார்.












Click it and Unblock the Notifications