உலகின் மிக ஆபத்தான உயிரினம்.. சிங்கம், புலியை கூட தூக்கி சாப்பிடும் கொசு! 10 லட்சம் பேரை கொல்கிறது
சென்னை: உலகிலேயே மிகவும் ஆபத்தான உயிரினம் என்றால் நாம் பெரும்பாலும் சிங்கும், புலி, பாம்பைத் தான் யோசிப்போம். ஆனால், உண்மையில் இவற்றை விட ஆபத்தான உயிரினம் என்றால் அது கொசு தான் என்பது உங்களுக்குத் தெரியுமா? உலகின் மற்ற எந்த விலங்குகளை விடவும் கொசுக்களே அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.!
இந்த உலகிலேயே மிகவும் பயங்கரமான உயிரினம்.. மனிதருக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் உயிரினம் என்றால் நமக்கு பல விலங்குகள் நினைவுக்கு வரும்.. சிங்கம், புலி, கரடி அல்லது பாம்புகள் எனப் பல விலங்குகளை நாம் நினைப்போம். ஆனால், உண்மையில் இந்த விலங்குகளால் மனிதர்களுக்கு ஏற்படுத்தும் ஆபத்து மிக மிகக் குறைவு.

ஆபத்தான உயிரினம்
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இவை அனைத்தையும் விட கொசுக்களே அதிக மரணங்களுக்குக் காரணமாக இருக்கிறது. சிறியதாக இருக்கும் கொசுக்கள் கடித்தால் கூட வலிக்காது.. இதனால் எப்படி ஆபத்து வரும் என நீங்கள் யோசிக்கலாம். ஆனால், உண்மையில் இந்தக் கொசுக்கள் கடிப்பதால் பல ஆபத்தான நோய்கள் பரவுகிறது. மலேரியா, டெங்கு, வெஸ்ட் நைல் காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல், ஜிகா, சிக்குன்குனியா எனப் பல ஆபத்தான நோய்களைக் கொசுக்கள் பரப்புகிறது.
உலகிலேயே வேறு எந்தவொரு உயிரினத்தை விடவும் கொசுக்களே அதிக மக்களைக் கொல்வதாக உலக சுகாதார மையம் கூறியுள்ளது. இன்றும் சயின்ஸ் வளர்ந்துவிட்டது. கொசுக்களைத் தடுக்கவும் ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனாலும் கூட இன்றும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7 முதல் 10 லட்சம் பேர் கொசுக்கடியால் பரவும் நோய்களால் உயிரிழக்கிறார்கள்.
பல வகை நோய்கள்
கொசுக்களில் 3,000க்கும் மேற்பட்ட வகைகள் இருந்தாலும், சில மட்டுமே மனித ரத்தத்தைக் குடித்து நோய்களைப் பரப்புகின்றன. அனோபிலஸ், ஏடிஸ் மற்றும் க்யூலெக்ஸ் இனங்களில் உள்ள சில கொசுக்களே மிகவும் ஆபத்தானவை. ஏடிஸ் எகிப்தி கொசு மட்டுமே யானைக்கால் நோய், ஜிகா, டெங்கு மற்றும் மஞ்சள் காய்ச்சலை பரப்புகிறது. வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல நாடுகளில் மலேரியாவைப் பரப்பும் ஒன்றாக அனோபிலஸ் கொசு இருக்கிறது.
கொசுக்கள் பொதுவாக வெப்பமான பகுதிகளில் தான் இருக்கும். இதனால் இவை அண்டார்டிகாவைத் தவிர அனைத்துக் கண்டங்களிலும் காணப்படுகிறது. மேலும், காலநிலை மாற்றத்தால் பூமி மெல்ல வெப்பமானதாக மாறி வரும் சூழலில், கொசுக்களின் இருப்பு வடக்கு மற்றும் தெற்கு திசைகளில் விரிவடைந்து வருகிறது. இதனால் மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்து மேலும் மேலும் அதிகரித்தே வருகிறது.
தமிழ்நாடு
தமிழ்நாட்டிலும் கூட ஒவ்வொரு ஆண்டும் கொசுக்கள் மூலமாகவே டெங்கு பரவுகிறது. இதனால் மோசமான பாதிப்பும் உயிரிழப்புகளும் கூட ஏற்படுகிறது. வீடுகளில் தேங்கி இருக்கும் நீரில் தான் கொசு முட்டை வளர்கிறது. அதன் மூலம் கொசுக்கள் எண்ணிக்கை அதிகரித்து, டெங்கு பாதிப்பு பரவுகிறது.
இந்தாண்டு கூட சென்னை, திருவள்ளூர், கோவை, கடலூர், தஞ்சை என பல மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு மோசமாக இருந்துள்ளது. இந்தாண்டு தமிழகத்தில் 15,796 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் எட்டுப் பேர் உயிரிழந்தும் உள்ளனர்.. ஒவ்வொரு ஆண்டும் நாம் தமிழகத்திலேயே கொசுக்களால் பல விலை மதிப்பற்ற உயிர்களை இழக்கிறோம்.
ஒரே வழி
தமிழ்நாடு என்று இல்லை.. உலகின் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக வெப்ப மண்டல பகுதிகளில், கொசுக்களால் ஏற்படும் பாதிப்பு மிக மிக மோசம் என்றே சர்வதேச வல்லுநர்களும் எச்சரிக்கிறார்கள். எனவே, கொசுக்களைக் கொல்வது மட்டுமே பல பெரிய நோய்களைத் தடுக்க ஒரு எளிமையான வழியாகும்.












Click it and Unblock the Notifications