மூலை முடுக்கெல்லாம் தக்காளி.. ரூ.8 க்கு இப்படி உதைபடுகிறதே.. திண்டுக்கல் விவசாயிகளின் நிலைமை பாருங்க
சென்னை: தக்காளி விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.. இதனால் இல்லத்தரசிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.. ஆனால் அதேசமயம், தக்காளி விளைவிக்கும் விவசாயிகள் கடுமையான அதிர்ச்சிக்கும், கவலைக்கும் உள்ளாகியிருக்கிறார்கள். என்ன காரணம்?
நம்முடைய தமிழ்நாட்டை பொறுத்தவரை 54,000 ஹெக்டேர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது... இதன்மூலம் 16.23 லட்சம் டன் தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 56 சதவீதம் தக்காளி உற்பத்தி நடைபெறுகிறது.

விளைச்சல்: திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் தக்காளிக்கு பஞ்சமில்லை.. ஒட்டன்சத்திரம் சாலைப்புதுார், அம்பிளிக்கை, கொள்ளபட்டி சுற்றிய கிராமப் பகுதிகளிலிருந்துதான், தக்காளி அதிகமாக விளைவிக்கப்படுகிறது.. குறிப்பாக பழனியை சுற்றியுள்ள கிராமங்களிலும் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர்.
எனினும், குறைந்த அளவிலான தக்காளி உற்பத்தி செய்யப்படுவதால், அண்டை மாநிலங்களையும் தமிழகம் நம்பியே உள்ளது.. பருவநிலை காரணமாக உற்பத்தி குறைவது, விளைச்சல் பாதிக்கப்படுவது, சில மாநிலங்களில் பெய்து வரும் கன மழை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்படுவது, போன்ற காரணங்களினால் தக்காளி விலைகளில் வித்தியாசம் தென்படுவது வழக்கமாகும்.
சில்லறை விலை: சென்னை கோயம்பேடு சந்தையிலும், சமீப நாட்களாகவே தக்காளி விலை உயர்ந்து காணப்பட்டது... அதாவது, ரூ.70 வரை தக்காளி விற்கப்பட்டது.. வெளிச் சந்தைகளில் சில்லறை விலையில் ரூ.70 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாக நேரிட்டது.

எனவே கூட்டுறவு காய்கறி கடைகளில் கிலோ தக்காளி, 38 ரூபாய்க்கு விற்பனை செய்தது தமிழக அரசு.. இதற்கு பிறகு தக்காளி விலை கடந்த வாரத்தில் ரூ.34ஆக குறைந்தது.. இப்போது தக்காளி விலை இன்னும் சரிந்துவிட்டதாம்..
விலை சரிவு: கடந்த மாதம் வரத்து குறைவால் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு மேல் விற்பனையான நிலையில், மெல்ல மெல்ல தக்காளி வரத்து அதிகரித்து, விலையும் கடுமையாக சரிந்துள்ளது... பழனியை சுற்றியுள்ள நெய்க்காரப்பட்டி, அய்யம்பா ளையம், வாடிப்பட்டி, தொப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் எப்போதுமே அதிக அளவு தக்காளி விளைவிக்கப்படும்.. இந்த தக்காளிகளை பழனி தக்காளி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கமாகும்..
தினசரி டன் கணக்கில் தக்காளி மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.. ஆனால், இப்போது 14 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி ரூ.100 முதல் ரூ.200 வரை மட்டுமே விலை கேட்கிறார்களாம். அதாவது, ஒரு கிலோ தக்காளி ரூ.8 முதல் ரூ.15 வரையே விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பறிப்பு செலவுக்குகூட பணம் கிடைக்காமல் விவசாயிகள் உச்சக்கட்ட வேதனைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
கோரிக்கை: போதுமான விலை கிடைக்காத விரக்தியில், அந்த தக்காளிகளை எல்லாம் குப்பையில் வீசி செல்கிறார்களாம்.. அந்த தக்காளிகள் மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு இரையாகி வருகின்றன.. எனவே, மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்து விலை கடுமையாக குறைந்துள்ள நிலையில், இதற்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும் என்று தக்காளி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications