"விஜயகாந்த் நலமுடன் உயிரோடு இருந்திருந்தால் தமிழ்நாடு அரசியல் போக்கே மாறி இருக்கும்".. சீமான் பேட்டி
தூத்துக்குடி: தவசி படத்துக்கு நான்தான் உரையாடல் எழுதினேன். விஜயகாந்துடன் அப்போது மனம் விட்டு பேசுகிற நிறைய வாய்ப்பு கிடைத்தது..
விஜயகாந்த் நலமுடன் உயிரோடு இருந்திருந்தால் தமிழ்நாடு அரசியல் போக்கே மாறி இருக்கும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று காலை காலமானார். அவரது உடலுக்கு ரசிகர்கள், கட்சி தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.. பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் நேற்று கோயம்பேட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் அஞ்சலி செலுத்த குவிந்ததால், போலீசார் கடும் சவாலை சந்தித்தனர். தமிழகம் முழுவதும் இருந்து வரும் தொண்டர்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்துவதற்கு ஏதுவாக தீவுத்திடலில் இன்று விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டுள்ளது.
திரை பிரபலங்கள் பலரும், விஜயகாந்த் உடன் தங்களது நட்பு மற்றும் நினைவலைகள் மற்றும் விஜயகாந்த் செய்த உதவிகள் குறித்து ஊடகங்களில் பேசியும், ட்விட்டரில் பகிர்ந்தும் வருகிறார்கள். அந்த வகையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, விஜயகாந்த் குறித்து பேசினார்.
அப்போது சீமான் கூறுகையில், "விஜயகாந்த் என்றால் அச்சமின்மை, துணிவுதான். எதற்கும் பயப்படமாட்டார். தவசி படத்துக்கு நான்தான் உரையாடல் எழுதினேன். விஜயகாந்துடன் அப்போது மனம் விட்டு பேசுகிற நிறைய வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. அவரை போல சிறந்த மனிதர் கிடைப்பது அரிது.
புகழின் உச்சியில் இருந்த போதும் அதை தலையில் ஏற்றிக் கொள்ளாமல் இருந்தார்; விஜயகாந்த் நலமுடன் உயிரோடு இருந்திருந்தால் தமிழ்நாடு அரசியல் போக்கே மாறி இருக்கும்; ஆக. சிறந்த மனிதர்; பண்பாளர்" என்று கூறினார்.
முன்னதாக தூத்துக்குடியில் ரஜினிகாந்த் பேட்டி அளித்த போது, "அன்பு நண்பர் விஜயகாந்தை இழந்தது மிகப் பெரிய துரதிருஷ்டம், அசாத்தியமான மன உறுதி கொண்டவர். விஜயகாந்த் எப்படியும் உடல்நலன் தேறிவிடுவார் என நினைத்தோம்; தேமுதிக பொதுக்குழுவில் அவரை பார்த்த போது நம்பிக்கை இழந்துவிட்டோம். விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப் பெரிய சக்தியாக இருந்து, தமிழ் மக்களுக்கு மிகப் பெரிய நல்லது செய்திருப்பார்; தமிழ் மக்கள் அந்த பாக்கியத்தை இழந்துவிட்டோம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications