ரேஷனில் 2 கிலோ கேழ்வரகு! தமிழகம் முழுவதும் ராகி எப்போது விநியோகம் தெரியுமா?
சென்னை: தமிழகம் முழுவதும் ரேஷனில் 2 கிலோ ராகி விரிவுப்படுத்தும் திட்டம் வரும் ஜூலை மாதத்திற்கு பிறகு அமல்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் முதல்கட்டமாக நீலகிரி மற்றும் தருமபுரி ஆகிய இரு மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "2018-ம் ஆண்டில் இருந்து தமிழகத்தில் கேழ்வரகு பயிரிடப்படும் பகுதியும், உற்பத்தியின் அளவும் உயர்ந்த வண்ணம் உள்ளன. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கேழ்வரகு அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.

கொள்முதல் இந்த திட்டத்தின்படி நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்ட அரிசி ரேஷன் அட்டைதாரர்கள், அரிசிக்கு பதிலாக அவர்களின் சொந்த விருப்பத்தின் பேரில் 2 கிலோ கேழ்வரகை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். அதற்காக, நீலகிரி மாவட்டத்திற்கு 920 டன் கேழ்வரகும், தர்மபுரி மாவட்டத்திற்கு 440 டன் கேழ்வரகும் என சேர்த்து மொத்தம் 1,360 டன் கேழ்வரகு தேவைப்படுகிறது.
ரேஷன் கடைகளில் அரிசி வாங்கும் அட்டைதாரர்களுக்கு விருப்பத்தின் பேரில் தற்போது கோதுமை வழங்கப்பட்டு வருகிறது. கோதுமை, இந்திய உணவு கழகத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. கேழ்வரகையும் இந்திய உணவு கழகத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்திற்கு கேழ்வரகு எவ்வளவு தேவையோ, அதற்கேற்ப கோதுமை ஒதுக்கீட்டை சரி செய்துகொள்ள முடியும். அதுபற்றி இந்திய உணவு கழகத்திடம் கோரிக்கை வைக்க வேண்டும்.
கோதுமைக்கு பதிலாக கேழ்வரகை கொள்முதல் செய்வதால் கூடுதல் செலவு எழ வாய்ப்பில்லை. ஏனென்றால், கோதுமை கிலோவுக்கு ரூ.2 என்றும், கேழ்வரகு கிலோவுக்கு ரூ.1 என்றும் இந்திய உணவு கழகத்தின் மூலம் வழங்கப்படுகிறது என்று உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் கூறியுள்ளார்.
நிர்வாக ஒப்புதல் அவரது கருத்துகளை அரசு கவனமுடன் பரிசீலித்தது. அதை ஏற்றுக்கொண்டு, ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் பரீட்சார்த்த முறையில், அரிசிக்கு பதிலாக மாதமொன்றுக்கு ஒரு குடும்பத்திற்கு அவர்களின் விருப்பத்தின் பேரில் 2 கிலோ கேழ்வரகை வழங்கும் முன்னோடி திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதலை வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ராகி விநியோகத்தை பிற மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தினால் மாதம் 1,360 மெட்ரிக் டன் கேழ்வரகு தேவைப்படுகிறது. ஆனால் கடந்த 6 மாதத்தில் 690 மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் மற்ற மாவட்டங்களுக்கு ராகி விநியோகத்தை விரிவுப்படுத்துவது தாமதமாகியுள்ளது. ஜூலை மாதம் அறுவடை முடிந்ததும் கேழ்வரகை கொள்முதல் செய்து அதன் இருப்பு அதிகரித்ததும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும் என தெரிகிறது.
தற்போது வரை தமிழகத்தில் ரேஷன் கடைகளில் இலவசமாக பச்சரிசி, புழுங்கல் அரிசி, கோதுமை வழங்கப்படுகிறது. அது போல் பாமாயில், துவரம் பருப்பு, சர்க்கரை உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது. ரேஷனில் ஒன்றரை கிலோ சர்க்கரை ரூ 38-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு சிலிண்டர் வைத்திருப்போருக்கு மண்ணெண்ணெய்யும் விற்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் சிறுதானியத்தை ஊக்கும்விக்கும் வகையில் அவற்றையும் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications