குடியரசு தின விழா: தமிழக அரசின் விருது! வீரதீர செயலுக்கான விருதை பெற்றார் வெற்றிவேல்!
சென்னை: குடியரசு தின விழாவையொட்டி தமிழக அரசின் வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கத்தை தீயணைப்புத் துறை வீரர் வெற்றிவேல் பெற்றார். இந்த விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை மெரினாவில் உழைப்பாளர் சிலை அருகே நடந்த 76ஆவது குடியரசு தின விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். உடன் முதல்வர் ஸ்டாலின் இருந்தார்.

76ஆவது குடியரசு தினவிழாவையொட்டி தமிழக அரசு வீரதீர செயலுக்கான பதக்கம், மதநல்லிணக்க விருது, நெல் உற்பத்தி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. காவல் துறை, விவசாயம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
அது போல் சிறந்த காவல் நிலையங்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டன. வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் சென்னையை சேர்ந்த தீயணைப்பு துறை வீரர் க. வெற்றிவேலுக்கு வழங்கப்பட்டது. கடந்த டிசம்பர் 12ஆம் தேதி அடையாறு எம் ஜி எம் மலர் மருத்துவமனை அருகே அடையாறு ஆற்றில் மூன்று பேர் உயிருக்கு போராடிய நிலையில், முன்னணி தீ அணைப்பாளரான வெற்றிவேல் தலைமையிலான குழு, ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆதிகேசவன், குமார், மற்றும் செல்வியை காப்பாற்றினர்.இதனையடுத்து இந்த விருது வெற்றி வேலுக்கு வழங்கப்பட்டது.

மத நல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் விருது இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த எஸ் ஏ அமீர் அம்சா, அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கான வேளாண்மை துறையின் சிறப்பு விருது, நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது தேனி மாவட்டத்தை சேர்ந்த ரா.முருகவேலுக்கு வழங்கப்பட்டது.
காந்தியடிகள் காவலர் பதக்கம் விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் கே சின்னகாமணனுக்கும். மகா மார்க்ஸ் காவல் நிலைய தலைமை காவலர், விழுப்புரம் தாலுக்கா சட்டம் மற்றும் ஒழுங்கு விழுப்புரம் மாவட்டம், கா கார்த்திக் தலைமை காவலர் துறையூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு திருச்சி மாவட்டம் கா சிவா இரண்டாம் நிலை காவலர் ஆயுதப்படை சேலம் மாவட்டம், பா பூமாலை இரண்டாம் நிலை காவலர் ஆயுதப்படை சேலம் மாவட்டம் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் விருதை மதுரை மாநகரத்தை சேர்ந்த c3 எஸ் எஸ் காலனி காவல் நிலையத்திற்கான கோப்பையை முதல் பரிசாக காவல் ஆய்வாளர் கே காசி முதலவரிடம் பெற்றார். இரண்டாம் பரிசு திருப்பூர் மாநகரத்தை சேர்ந்த திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்கான கோப்பையை காவல் ஆய்வாளர் என் உதயகுமார் முதலமைச்சரிடம் கோப்பையை பெற்றார்.
மூன்றாம் பரிசு திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த திருத்தணி காவல் நிலையத்திற்கான கோப்பையை காவல் ஆய்வாளர் முதல்வர் ஸ்டாலினிடம் பெற்றார்.












Click it and Unblock the Notifications