மேட்டரே வேற.. கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்கவில்லை திமுக.. காதர் மொகிதீன் சந்தித்தது ஏன் தெரியுமா?
சென்னை: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் தலைமையிலான குழுவினர் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனை நேற்று சந்தித்து பேசிய நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையை திமுக தொடங்கிவிட்டதாக தகவல்கள் பரவின.
இன்னும் ஒரு படி மேலாக வேலூர் மக்களவைத் தொகுதியை முஸ்லீம் லீக்கிற்கு திமுக ஒதுக்கக் கூடும் என்றெல்லாம் கூறப்பட்டன. இந்நிலையில் துரைமுருகனுடனான சந்திப்பு பற்றி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் அபுபக்கரிடம் பேசினோம். அப்போது அவர் கூறியதாவது;

''முதலில் நாங்க துரைமுருகனை பார்ப்பதற்காகவே அண்ணா அறிவாலயத்துக்கு போகவில்லை. இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் பவள விழா நிறைவு மாநாடு நவம்பர் 26ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது. இதில் முதலமைச்சர் ஸ்டாலினை கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கவே அண்ணா அறிவாலயம் சென்றிருந்தோம். முதல்வர் வர நேரமாகும் என்றார்கள். மாலை பார்த்துக் கொள்வோம் என்று பேசி அங்கிருந்து புறப்பட தயாரானோம்.''
''அப்போது தான் அங்கிருந்த துரைமுருகன் எங்களை அழைத்துப் பேசிக்கொண்டிருந்தார். பவள விழா நிறைவு மாநாடு குறித்தும் பொதுவான அரசியல் பற்றியும் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு விட்டோம். மற்றபடி கூட்டணி தொடர்பாகவோ, தொகுதி பங்கீடு குறித்தோ எதுவுமே பேசவில்லை. ஆனால் அதற்குள் கூட்டணி பேச்சுவார்த்தை என்ற தகவல் பரவி வேறு கோணத்தில் செய்திகள் வெளியாகிவிட்டன.''

''ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும், திமுகவை பொறுத்தவரை எப்போதுமே தலைவரோ, பொதுச்செயலாளரோ நேரடியாக கூட்டணிக் கட்சி தலைவர்களிடம் கூட்டணி பற்றியோ, சீட் பங்கீடு குறித்தோ பேசமாட்டார்கள். குழு அமைக்கப்பட்டு அந்த குழு தான் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தும். சாதாரணமாக நடந்த சந்திப்பை இவ்வளவு பெரிதாக ட்விஸ்ட் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. பரவாயில்லை, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் செயல்பாடுகளை தான் செய்திகளாக வெளியிடமாட்டீங்கிறீங்க, இப்பவாவது எங்களை பற்றி பேசுறீங்களே'' எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications