மறக்க முடியுமா வேலூர் கார்த்தியாயினியை? பாஜக திடீர்ன்னு வேட்பாளரா அறிவிச்சிட்டாங்களே! ஹைலைட்டே இதான்
சென்னை; தமிழ்நாட்டில் பாஜகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் சிதம்பரம் தொகுதிக்கு பி கார்த்தியாயினி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இதே தொகுதியில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமா தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
தமிழ்நாட்டில் 9 தொகுதிகளுக்கான பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. இது தேசிய அளவில் பாஜகவின் மூன்றாவது வேட்பாளர் பட்டியல் ஆகும்.
தென்சென்னை - தமிழிசை
மத்திய சென்னை - வினோஜ் செல்வம்
வேலூர் - ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி)
கிருஷ்ணகிரி - நரசிம்மன்
நீலகிரி - எல்.முருகன்
கோவை - அண்ணாமலை
பெரம்பலூர் - பாரிவேந்தர் (இ.ஜ.க)_
நெல்லை- நயினார் நாகேந்திரன்
கன்னியாகுமரி - பொன் ராதாகிருஷ்ணன்

இன்று மீதம் உள்ள தொகுதிகளுக்கான பாஜகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்
1) திருவள்ளூர் - பாலகணபதி
2) வட சென்னை - பால் கனகராஜ்
3) திருவண்ணாமலை - அஸ்வத்தாமன்
4) நாமக்கல் - கே.பி.ராமலிங்கம்
5) திருப்பூர் - முருகானந்தம்
6) பொள்ளாச்சி - வசந்தராஜன்
7) கரூர் - செந்தில்நாதன்
8) சிதம்பரம் - கார்த்தியாயினி
9) நாகை - எஸ்.ஜி.எம்.ரமேஷ்
10) தஞ்சை - எம்.முருகானந்தம்
11) சிவகங்கை - தேவநாதன் யாதவ்
12) மதுரை - ராம சீனிவாசன்
13) விருதுநகர் - ராதிகா சரத்குமார்
14) தென்காசி - ஜான் பாண்டியன்
15) புதுச்சேரி - நமச்சிவாயம்
பி கார்த்தியாயினி: தமிழ்நாட்டில் பாஜகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் சிதம்பரம் தொகுதிக்கு பி கார்த்தியாயினி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மேயரான கார்த்தியாயினி கடந்த 2017ல்தான் பாஜகவில் போய் இணைந்தார்.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது இவர் செயல்பட்ட விதத்தை வேலூர் மக்கள் இன்னும் மறக்கவில்லை. அப்படி ஒரு அதிரடி அரசியலை செய்தவர் கார்த்தியாயினி. இவரது அதிமுக அரசியலில் மறக்க முடியாத பாடத்தை சென்னை உயர்நீதிமன்றம் கற்றுக் கொடுத்தது நீதிபதி குன்ஹா தீர்ப்பு விவகாரத்தில்தான். அப்போது இவர் செயல்பட்ட விதம் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியது.
வேலூர் மாநகராட்சி மேயராக 2011ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர் கார்த்தியாயினி. திமுக வேட்பாளர் ராஜேஸ்வரியை கிட்டத்தட்ட ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்திய சாதனை படைத்தார். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டு தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்த தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவை விமர்சித்து தீர்மானம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் கார்த்தியாயனி.
தேசிய அளவில் அப்போது சர்ச்சையானவர் இவர். பொதுவாக நீதிபதிகளை விமர்சிக்க கூடாது என்பதை மறந்து மேயர் பொறுப்பில் இருந்தும் கூட, ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் வாங்க அதிமுகவினர் நடத்திய ஜால்ரா போராட்டங்களிலேயே மிகவும் ஷாக்கான விஷயம் இதுதான். கார்த்தியாயினி மற்றும் அதிமுக கவுன்சிலர்கள், நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றினர். அவரது உருவபொம்மையையும் எரித்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேயரின் செயல் சட்டத்திற்குப் புறம்பான செயல். நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல் என்று கண்டனங்கள் எழுந்தன. சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம், மேயர் மன்னிப்பு கேட்க வேண்டும், அதை பத்திரிகை செய்தியாக வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மாநகராட்சிக் கூட்டத்தைக் கூட்டிய மேயர் கார்த்தியாயினி தீர்மானம் போட்டதற்காகவும், கொடும்பாவி கொளுத்தியதற்காகவும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார்.
அதன்பின் ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுக பாசம் எல்லாம் போய் பாஜகவில் ஐக்கியம் ஆனவர் கார்த்தியாயினி. இப்பொது சிதம்பரம் தொகுதிக்கு பி கார்த்தியாயினி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இதே தொகுதியில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமா தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறார்












Click it and Unblock the Notifications