BC, MBC பிரிவினரே! கேஸ் சிலிண்டர் மூலம் இயங்கும் அயர்ன் பாக்ஸ்களை இலவசமாக பெற விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்கள் திரவ பெட்ரோலிய வாயு (LPG) மூலம் இயங்கும் அயர்ன் பாக்ஸ்களை பெறுவதற்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இன் மக்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக இத்துறையின் மூலம் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒரு முக்கியமான திட்டம் சலவைத் தொழிலை மேற்கொள்ளும் ஏழை எளிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு கரியால் இயங்கும் பித்தளை தேய்ப்பு பெட்டிகள் வழங்கும் திட்டமாகும். மேற்படி பித்தளை தேய்ப்பு பெட்டிகளுக்கு பதிலாக திரவ பெட்ரோலிய வாயு (LPG) மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகள் வழங்கும் புதிய திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானியக் கோரிக்கையின் போது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த சலவைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றவர்களுக்கு மாறிவரும் காலச் சூழலுக்கேற்ப, புதிய முன்னெடுப்பாக தற்போது வழங்கப்பட்டு வரும் பித்தளை தேய்ப்பு பெட்டிகளுக்கு பதிலாக திரவ பெட்ரோலிய வாயு (LPG) மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகள் 1200 பயனாளிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
எனவே, இத்திட்டத்தின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் சலவைத் தொழிலை மேற்கொள்ளும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.00 லட்சத்திற்குள் ஏழை எளிய பிற்படுத்தப்பட்டோர், மிகபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்கள் திரவ பெட்ரோலிய வாயு (LPG) மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகளை பெறுவதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் (அறை எண்.110) நேரில் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் இனத்தை சார்ந்த வகுப்பினர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் விதமாக நவீன சலவையகம் அமைக்க தமிழ்நாடு அரசு நிதி உதவியுடன் புதுமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. நவீன சலவையகம் அமைப்பதற்கு தேவையான இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் பிற முன் நிகழ்வுகளுக்கு தேவையான நிதியில் ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க 10 நபர்கள் கொண்ட ஒரு குழுவாக செயல்பட வேண்டும். இக்குழு உறுப்பினர்களின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் மிகாமல் இருத்தல் வேண்டும். மேற்படி திட்டம் மூலம் பயன்பெற விரும்புபவர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.












Click it and Unblock the Notifications