8 மாத கர்ப்பம்.. ஆசையாய் காத்திருந்த குடும்பம்.. மக்களுக்காக 'உயிரை' விட்ட டாக்டர் சண்முகப்பிரியா
சென்னை: 8 மாத கர்ப்பிணியாக இருந்தாலும், முழு நேரமும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து, இன்று தானே அந்த கொரோனாவுக்கு பலியாகி பலரது கண்களை கலங்க வைத்துவிட்டார் மருத்துவர் சண்முகப்பிரியா.
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை கட்டுக்கடங்காமல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தினம் நான்கு லட்சம் பேர் இந்தியாவில் மட்டும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இன்றைய நிலவரப்படி, உலகிலேயே அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நாடு இந்தியா மட்டுமே.
அஸ்ஸாம் புதிய முதல்வராக தேர்வு- பாஜக மேலிடத்துடன் மல்லுகட்டி சாதித்தேவிட்டார் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா!
தமிழகத்தின் நிலைமையும் இதே தான். தினசரி பாதிப்பு 27,000 கடந்து முப்பத்தாயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. மறுப்பக்கம் இறப்புகளும் சளைக்காமல் அதிகரிக்கிறது. தமிழகத்தில் தினமும் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களில் தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்து வருகின்றனர். பல கனவுகளுடன், நம்பிக்கையுடன், எதிர்பார்ப்புகளுடன் இருந்த உயிர்கள் கொரோனா கொடூரத்தால் மண்ணிற்குள் புதைந்து வருகின்றன.
ஓடைப்பட்டி
அப்படியொரு இறப்பை தேனி மண் தற்போது சந்தித்து இருக்கிறது. ஆம்! மக்களுக்காக உழைத்த மருத்துவர் சண்முகப்பிரியா இப்போது நம்மிடம் இல்லை. மதுரை அனுப்பானடி நகர்ப்புற சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலராக பணியாற்றி வந்தவர் மருத்துவர் சண்முகப்பிரியா. 8 மாத கர்ப்பிணி. பணிபுரிந்தது மதுரையாக இருந்தாலும், தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டத்தில் அமைந்துள்ள ஓடைப்பட்டி தான் இவரது சொந்த ஊர். தாய் பெயர் பிரேமா.
2005 பேட்ச் ஸ்டூடன்ட்
மதுரை மருத்துவக்கல்லூரியில் தனது மருத்துவப் படிப்பை முடித்த சண்முகப்பிரியா அங்கு 2005 பேட்ச் மாணவி ஆவார். திருமணமாகி சின்னமனூர் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த சண்முகப்பிரியா கடந்த ஆண்டு கொரோனா பாதிக்கத் தொடங்கியதில் இருந்தே, இடைவிடாமல் பணியாற்றி வந்திருக்கிறார். கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட பல நோயாளிகளுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை கொடுத்து அவர்களை காப்பாற்றி இருக்கிறார்.
கேட்காத சண்முகப்பிரியா
வீட்டில் ஓய்வு எடுக்கும் படி, சக மருத்துவர்கள், நண்பர்கள் என பலரும் வலியுறுத்தியும், கொரோனா தடுப்பு பணிக்கே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். இதனால் தான் 8 மாத கர்ப்பிணியாக இருந்தும் தினம் மருத்துவமனைக்கு வந்து பணியாற்றி உள்ளார். இந்த சூழலில் தான் கடந்த 10 நாட்களுக்கு முன் அவருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது. தகவலின் படி, தனக்கு கொரோனா ஏற்பட்டது தெரியாமலேயே, அவர் மருத்துவப் பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இதனால், அவரது நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
ஒட்டுமொத்த கிராமமும்
பிறகு, உடல் நலிவுற்ற நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சண்முகப்பிரியா, பிறகு கடந்த 4ஆம் தேதி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், 90% க்கும் மேல் அவருக்கு நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் கர்ப்பிணி என்பதால் அவர் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இவரது உயிரிழப்பால் ஒட்டுமொத்த ஓடைப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
நண்பர்கள் கோரிக்கை
கர்ப்பிணியாக இருந்தாலும், வீட்டில் இருக்காமல் மக்களுக்காக பணியாற்றிய போது, கொரோனா தொற்று ஏற்பட்டு மரணமடைந்த சண்முகப்பிரியாவுக்கு போரில் மரணமடைந்த ராணுவ வீரருக்குத் தரும் இறுதி மரியாதையை வழங்க வேண்டும் என்று அவருடன் படித்த, வேலைப்பார்த்த மருத்துவ நண்பர்கள் அனைவரும் ஒருசேர கோரிக்கை விடுத்துள்ளனர்.