கிரையம் பண்ண போறீங்களா? குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பில் திடீர்னு வெளியான தகவல்.. பதிவுத்துறை அதிரடி
சென்னை: பொதுமக்களின் நன்மைக்காக, அடுத்தடுத்த அதிரடிகளை பத்திரப்பதிவு துறை செய்து வரும் நிலையில், இன்னொரு முக்கிய உத்தரவையும் பிறப்பித்துள்ளது. அது தொடர்பான தகவலும் வெளியாகி உள்ளது.. என்ன அது?
வரும் 2023 - 24 நிதியாண்டுக்குள், 20,000 கோடி வருவாய் ஈட்ட, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த இலக்கையும் எட்டிப்பிடித்துவிட பத்திரப்பதிவு துறை ஆர்வம் காட்டி வருவதாகவும் தெரிகிறது.

அந்தவகையில், பதிவு கட்டணம் உயர்வு, வழிகாட்டி மதிப்பு மாற்றம் காரணமாக, வருவாய் இலக்கு 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு உள்ளதாக, சார் பதிவாளர்கள் தெரிவித்திருந்தனர்.
கிரையப்பத்திரம்: காரணம், கிரைய பத்திரங்களுக்கான பதிவு கட்டணம், 2 சதவீதம் குறைக்கப்பட்டது, பழைய வழிகாட்டி மதிப்பை மீண்டும் அமல்படுத்தியது, போன்ற காரணங்களால், வருவாய், 20 சதவீதம் வரை குறைந்துவிட்டதாக அரசு சார்பில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை சரிசெய்வதற்காகவே, நிலங்களுக்கான குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பும், பொது அதிகார ஆவணம் உள்ளிட்ட பத்திரங்களின் பதிவு கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.. இதைத்தவிர, அடுக்குமாடி கட்டிடங்கள் பதிவு நடைமுறையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற தொடர் நடவடிக்கைகளால், பத்திரப்பதிவு வருவாய் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
கட்டணம் குறைகிறதா: எனினும், குறைந்தபட்ச மதிப்பு, பதிவு கட்டண உயர்வால், பத்திரங்களின் எண்ணிக்கையில் லேசான சரிவு ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.. பத்திரங்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தால் மட்டுமே, தற்போது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட முடியும் என்ற கருத்து மேலோங்கி வருவதால், விரைவிலேயே பதிவு கட்டண உயர்வில் மாற்றம் வரலாம் என்றும் நம்பப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், வழிகாட்டி மதிப்பு குறைபாட்டை சரிசெய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்புகள் நிர்ணயிக்கப்பட்டதில், சில இடங்களில் குறைபாடுகள் இருப்பது தெரிய வந்ததையடுத்து, இப்படியொரு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.. வீடுகளுக்கான மதிப்பை விட, வணிக பகுதிகளுக்கான மதிப்பு அதிகமாக இருக்கும் என்பதை கவனத்தில் வைத்து, இந்த குறைபாடுகளை சரி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிரடி நடவடிக்கை: அதன்படி, மாவட்ட பதிவாளர்கள் வாயிலாக, இது தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. விரைவில் தவறுகள் திருத்தப்பட்டு, உரிய மதிப்புகள் இணையதளத்தில் பதிவேற்றப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் நம்பிக்கை தரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications