அமலாக்க துறை அதிகாரியை விஜிலென்ஸ் கைது செய்ய அதிகாரம் இருக்கா? மதுரை ED அதிகாரி கைதால் பரபரப்பு
சென்னை: அமலாக்கத் துறை அதிகாரியைத் தமிழ்நாடு விஜிலென்ஸ் துறை கைது செய்துள்ள நிலையில், இதற்கு விஜிலென்ஸ் துறைக்கு அதிகாரம் இருக்கிறதா என்பது குறித்து ஓய்வு பெற்ற காவல் அதிகாரி சித்தண்ணன் விளக்கியுள்ளார்.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டரை மிரட்டி லஞ்சம் வாங்க முயன்றதாக அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து அங்கித் திவாரி பணியாற்றி வந்த மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் விஜிலென்ஸ் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தமிழ்நாடு போலீசாருக்கு இந்த விவகாரத்தில் அதிகாரம் இருக்கிறதா என்பது குறித்து ஓய்வு பெற்ற காவல் அதிகாரி சித்தண்ணன் விளக்கியுள்ளார்.
சித்தண்ணன்: இது தொடர்பாக ஓய்வு பெற்ற காவல் அதிகாரி சித்தண்ணன் டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "இந்தியா முழுவதும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் எங்கு நடந்தாலும் விசாரிக்க அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இருக்கிறது. அமலாக்கத் துறை அதிகாரிகளை போலீசார் என்று அறிவிக்கப்படவில்லை.
இருப்பினும், போலீசருக்கான அதிகாரங்கள் அனைத்தும் இவர்களுக்கும் இருக்கிறது. இவர்கள் எங்கு வேண்டுமானாலும் சோதனை நடத்தலாம் கைதுகளைச் செய்யலாம் என்ற மிகப் பெரிய அதிகாரம் இருக்கிறது.
சிபிஐ: மேலும், மத்திய அரசு ஊழியர் ஒருவர் லஞ்சம் வாங்கினார் என்றால் அல்லது முறைகேடாகச் சொத்து சேர்த்தார்கள் என்றால் அவரை கைது செய்து, விசாரணை நடத்தத் தண்டனை வாங்கித் தர வேண்டும் என்பதற்காகவே சிபிஐ அமைப்பு உருவாக்கப்பட்டது. மத்திய அரசு ஊழியர்கள் தவறு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவே இந்த ஏற்பாடு
அதிகாரம் இருக்கா: அதேநேரம் இந்த குறிப்பிட்ட சம்பவத்தில் தமிழ்நாடு அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருக்கிறதா என்றால் என்றால் அதிகாரம் இருக்கிறது என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் இந்த குற்றம் என்பது தமிழ்நாட்டில் நடந்தது. திண்டுக்கல்லில் வைத்து அவர் பணம் வாங்கும்போது அவரை கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட நபரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.. அரசு மருத்துவராக பணியாற்றி வருபவர். எனவே இங்குள்ள போலீசாருக்கு இதில் அனைத்து அதிகாரமும் இருக்கிறது.
தமிழ்நாட்டில் விஜிலென்ஸ் துறையை போலீசாராக அறிவிக்கப்பட்டுள்ளார்.. எனவே அவர்களுக்குச் சோதனை நடத்த அனைத்து அதிகாரமும் இருக்கிறது. எனவே மத்திய அரசு ஊழியருக்கு எதிராகத் தமிழ்நாடு விஜிலென்ஸ் துறையால் நடவடிக்கை எடுக்க முடியாது என்று சொல்ல முடியாது. அந்த குறிப்பிட்ட அதிகாரி லஞ்சம் வாங்கும் பொழுது கையும் களவுமாகப் பிடித்துள்ளார்.. அதுவும் நெடுஞ்சாலையில் வைத்து 20 கிலோமீட்டர் துரத்திச் சென்று அவரை பிடித்துள்ளனர். ரசாயனம் தடவிய பணத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
ரெய்டு எதற்கு: இந்த குற்றம் தமிழ்நாட்டில் நடந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட நபர் தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருபவர். எனவே இதில் விஜிலென்ஸ் துறைக்கு அதிகாரம் இருக்கிறது. எப்போதும் இதுபோன்ற ஒருவரை லஞ்சம் வழக்கில் கைது செய்யப்பட்டால் அவர் தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்துவார்கள். வேறு எங்காவது எதையாவது பதுக்கி வைத்துள்ளாரா என்பதைக் கண்டறியவே இந்த ரெய்டு. இப்போதும் அதைத்தான் மேற்கொண்டுள்ளனர்,
ஆனால் இப்போது அமலாக்கத் துறை அலுவலகத்தில் நடக்கும் காட்சிகள் கவலை அளிப்பதாக இருக்கிறது. எந்த ஒரு பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக போலீசார் பாதுகாப்புடன் சென்று தமிழ்நாடு விஜிலன்ஸ் துறை ரெய்டு நடத்தி வருகிறது.. ஆனால் அதற்குப் போட்டியாக அமலாக்கத்துறை துணை இராணுவ படையினரைக் குவித்துள்ளனர். இது பதற்றத்தை ஏற்படுத்தும் ஒன்றாகவே இருக்கிறது. இதன் மூலம் அவர்கள் இது பொய்யான வழக்கு என்று சொல்ல வருகிறார்களா என்ன?
ஒத்துழைப்பு கொடுத்திருக்க வேண்டும்: ரெய்டிற்கு அவர்கள் ஒத்துழைப்பு அளித்திருக்க வேண்டும். சோதனை முடிந்த பிறகே அது மத்திய அரசு ஊழியர் தொடர்புடைய வழக்கு என்பதால் இதை சிபிஐ விசாரிக்கலாம் என்று கூறலாம். ஆனால் இப்போது அவர்கள் இப்படிச் செய்திருக்கக் கூடாது.
மேலும், மத்திய அரசு ஊழியரைக் கைது செய்யச் சிறப்பாகச் சிறப்பு நடைமுறை என்று எல்லாம் எதுவும் இல்லை. மத்திய அரசு ஊழியர் என்றாலும் சரி மாநில அரசு ஊழியர் என்று யாராக இருந்தாலும் சரி கைது செய்யப்படும் நடைமுறை என்பது ஒன்றுதான். கைது செய்யப்பட்டு 24 மணி நேரத்தில் அது அலுவலக உயர் அதிகாரியிடம் தெரிவித்தால் போதும்.
அதிகாரம் இருக்கு: பொதுவாக இது போன்று முதற்கட்ட விசாரணை நடத்தத் தமிழ்நாடு போலீசாருக்கு என்று இல்லை அனைத்து மாநில போலீசாருக்கும் அதிகாரம் இருக்கிறது. அதன்பிறகு வேண்டுமென்றால் மத்திய அரசு ஊழியர் என்பதால் வழக்கை மாற்றச் சொல்லிக் கேட்கலாம்.. அதுவும் கூட மாநில அரசுக்கே வழக்கை மாற்றுவதற்கான அதிகாரம் இருக்கிறது" என்றார்.












Click it and Unblock the Notifications