"நாய்தான் கடிக்கலையே!" பீச்சில் வளர்ப்பு நாயின் ஓனர் ஆணவப் பேச்சு! கீர்த்தன்யா போலீஸில் புகார்
சென்னை: கடற்கரையில் வளர்ப்பு நாய் ஒன்று தன்னை துரத்திய போது வேடிக்கை பார்த்த உரிமையாளரிடம் "நாய் கடித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்" என கேட்டதற்கு அவர் "அதான் கடிக்கலையே" என்றார். அதனால் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாக சமூகநல ஆர்வலர் கீர்த்தன்யா தெரிவித்துள்ளார்.
கீர்த்தன்யா என்பவர் மனநல பயிற்சியாளர், தியானம் கற்றுக் கொடுப்பவர். இவர் சமூகம் சார்ந்த கருத்துகளை தனது சமூகவலைதளங்களில் எழுதி வருகிறார்.

அந்த வகையில் இவர் நாய்க் கடி குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் காவல் நிலையத்தில் இன்று ஒரு நாய் பிரியை மீது புகார் கொடுத்தேன். என்ன நடந்தது என்பதை சொல்கிறேன்.
இன்று காலை நான் வழக்கம் போல் கடற்கரையில் ஜாக்கிங் சென்றேன். அப்போது திடீரென ஒரு கருப்பு நிற நாய் என்னை துரத்தியது. அப்போது அதன் கழுத்தில் பட்டை இருந்தது. ஆனால் அத்துடன் எந்த கயிறும் இல்லை. உடனே அது வளர்ப்பு நாய் என்பதை முடிவு செய்தேன்.
எங்கிருந்தோ அவிழ்ந்து கொண்டு வந்துவிட்டது என நினைத்து சுற்றி பார்த்தேன். அப்போது 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் என்னை அநாயாசமாக பார்த்தார். அவரது கையில் நாய் கயிறு இருந்ததால் அவர்தான் ஓனர் என்பதை அறிந்து கொண்டேன். அதுவும் இல்லாவிட்டால் அவருக்கும் நாய்க்கும் சம்பந்தமே இல்லாதது போல் இருந்திருப்பார்.
திடீரென அந்த நாய் போய்விட்டது. நானும் எனது ஓட்டத்தை தொடர்ந்தேன். சிறிது தூரம் சென்றதும் மீண்டும் அந்த நாய் என்னை துரத்தியது. அப்போது என் மார்பு மீது பாய முயன்றது. உடனே நான் உதவிக்கு அந்த பெண்ணை அழைத்தேன்.
ஆனால் அவரோ அங்கிருந்து நூலிழை அளவு கூட பதறியபடி நகர்ந்து வந்து நாயை பிடிக்கவே இல்லை. அவர் பாட்டுக்கு இருந்தார். மீண்டும் அந்த நாய் போய்விட்டது. மீண்டும் என்னை நோக்கி துரத்தியது. அப்போது ஆக்ரோஷமாக பற்களை கடித்த படியே குரைத்தது.
ஒரு வயதான பெண் (நாய் உரிமையாளரின் உறவினராக இருக்கும்), அந்த நாயை அதட்டினார். அப்போது கூட அந்த பெண், நாயை பிடிக்க வரவில்லை. என்னையும் அவருடைய நாயிடம் இருந்து காக்க முயலவில்லை. உடனே நான் எழுந்து சென்று ஒரு 100 மீட்டர் தூரம்தான்! அவரிடம் " முதல் முறை உங்கள் நாய் என்னை துரத்தியது, நான் அமைதியாக இருந்தேன். ஆனால் 4 முறை என்னை ஆக்ரோஷமாக துரத்தும் போது கூட நீங்கள் ஏன் அந்த நாயை பிடிக்காமல் வேடிக்கை பார்த்தீர்கள்.
குறைந்தபட்சம் அந்த நாயை அழைத்திருக்கலாமே" என்றேன். அதற்கு அந்த பெண் சொன்ன பதில் இருக்கே அப்பப்பா! நான் சொன்னதை கேட்டு சற்றும் பதறாமல், "இத சொல்லத்தான் உங்கள் ஜாக்கிங்கை நிறுத்திவிட்டு வந்தீர்களா" என கேட்டுவிட்டு கடற்கரையை பார்த்தபடி திரும்பிக் கொண்டு, "என் நாய் உங்களுடன் விளையாடியது" என்றார்.
எனக்கு இதை கேட்டதும் கோபம் வந்துவிட்டது. உடனே நான், "உங்கள் நாய் என்னை கடித்திருந்தால் யார் பொறுப்பு என்றேன்" அதற்கு அந்த பெண், அதான் கடிக்கலையே! அப்புறம் என்ன?" என கேட்டார். இதை கேட்டது எனக்கு பேரதிர்ச்சி!
எனக்கு கோபம் வந்தது. உடனே அப்படி எப்படி சொல்வீர்கள். என் இடத்தில் ஒரு வயதானவர் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும், நாய் துரத்தும் போது ஓடி கீழே விழுந்து எலும்பு உடைந்திருந்தால் என்ன ஆவது" என கேட்டதற்கு, அந்த பெண், "என் நாயை விட நீங்கள் சப்தமாக கத்துகிறீர்கள். அது என் நாய்க்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தும்" என்றார்.
உடனே நான், நீங்கள் அமைதியாக இருப்பதால் நீங்கள் செய்வது சரியல்ல. என் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறீர்கள். என்னுடன் காவல் நிலையத்திற்கு வாருங்கள். யார் செய்வது சரி என்பதை பார்க்கலாம் என்றேன்.
அதற்கு அவர் "நீங்கள் இப்படி கத்துவதை என் நாய் மீண்டும் பார்த்தால் உங்கள் மீது மேலும் கோபமடையும், ஒழுங்காக இந்த இடத்தை விட்டு செல்லுங்கள்" என்றார். நானும், உங்களுக்கு உங்கள் நாய் முக்கியம் என்றால் எனக்கு என் உயிர் முக்கியம் என கூறி மீண்டும் சண்டையிட்டேன். அப்போது அந்த வயதான பெண் தலையிட்டு, என்னிடம் வருத்தம் தெரிவித்தார்.
ஆனால் நான் அதை ஏற்கவில்லை. அந்த பெண்ணுக்கு சரியான பாடம் புகட்ட நினைத்தேன். நான் உங்கள் வீட்டுக்கு வருவேன். உங்கள் முகவரியை தெரிந்து கொண்டு காவல் நிலையத்தில் புகார் கொடுப்பேன் என்றேன். பின்னர் அவர் இருக்கும் வீட்டை அறிந்து கொண்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன்.
போலீஸாரும் அந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து சட்டத்திட்டங்களை சொல்லிக் கொடுத்தனர்.
1. நீங்கள் நாய் வளர்க்க மாநகராட்சியில் உரிமம் வாங்குங்கள்.
2. நாயை கயிறுடன்தான் வெளியே அழைத்து வர வேண்டும். அப்படி அழைத்து வராவிட்டால் உங்களுக்கு 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கலாம்.
3. உங்கள் நாய் யாரையாவது பிராண்டி விட்டாலோ கடித்துவிட்டாலோ, சம்பந்தப்பட்ட நபருக்கு ரூ 2 லட்சம் முதல் 10 லட்சம் வரை இழப்பீடு வழங்க வேண்டும்
இவ்வாறு காவல் நிலையத்தில் கூறியதும் அந்த பெண் கண்களை விரித்து கேட்டுக் கொண்டிருந்தார். பிறகு இன்னொரு முறை உங்கள் நாயை கயிறு கட்டாமல் பொது இடத்திற்கு அழைத்து வருவதை பார்த்தால் நீதிமன்றத்திற்கு செல்வேன் என கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நான் சென்றுவிட்டேன். இவ்வாறு அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications