மாணவர்களின் கைகளில் சாதியை குறிக்கும் பகீர் கலர் கயிறுகள்.. பள்ளி கல்வித்துறை சூப்பர் உத்தரவு
சென்னை: பள்ளி மாணவர்கள் கைகளில் சாதிய அடையாளங்களை குறிக்கும் வண்ண கயிறுகளை கட்ட அனுமதிக்க கூடாது என மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் சில பள்ளிகளில் மாணவர்களிடையே சாதியை குறிக்கும் வகையில் வண்ண வண்ண நிறங்களில் கயிறு அணியும் பழக்கம் காணப்படுகிறது. இந்த கயிறினை வைத்து எந்த ஜாதியைச் சேர்ந்த மாணவன் என்பதை எளிதாக மற்ற மாணவர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள். இதன் மூலம் இரு பிரிவான மாணவர்கள் பிரிந்து சாதி ரீதியான வன்ம தாக்குதல்களை அடிக்கடி நிகழ்த்தியும் வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 2018ம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவு அதிகாரிகள் பள்ளி கல்வித்துறைக்கு கோரிக்கை ஒன்றை வைத்தார்கள். அதில் தமிழ்நாட்டில் ஒரு சில பள்ளிகளில் மாணவர்கள் விதவிதமான வண்ணங்களில் கயிறுகளை அணிந்து செல்கின்றனர். குறிப்பாக மஞ்சள், சிவப்பு, பச்சை மற்றும் காவி ஆகிய நிறங்களில் கயிறுகள் கட்டியிருக்கின்றனர். இந்தக் கயிறுகள் மூலம் மாணவர்களின் ஜாதிகள் கண்டுபிடிக்கப்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து இந்த கயிறு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி, அவ்வாறு நடக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பள்ளி மாணவர்கள் கைகளில் சாதிய அடையாளங்களை குறிக்கும் கயிறுகளை கட்ட அனுமதிக்க கூடாது என மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்தி, அவ்வாறு நடக்கும் பள்ளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் இது போன்ற நிகழ்வுகள் இனிமேல் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.