வருத்தம் தெரிவித்த சேகர் பாபு.. கோவில் அனுமதி மறுப்பு விஷயம்.. முற்றுப்புள்ளி வைத்த செல்வப்பெருந்தகை
சென்னை: வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அதற்கு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செல்வப்பெருந்தகையை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்துள்ளார். இதையடுத்து செல்வப்பெருந்தகை கோவில் அனுமதி மறுப்பு விஷயத்தை முற்றுப்புள்ளி வைப்பதாக தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டையில் உள்ள முருகன் கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குள் இந்த கோவில் வருவதால், அந்த தொகுதியின் எம்.எல்.ஏவும், தமிழக காங்கிரஸ் தலைவருமான செல்வப்பெருந்தகை வந்திருந்தார்.

செல்வப்பெருந்தகைக்கு அனுமதி மறுப்பு
அப்போது அவருக்கு குடமுழுக்கு நடக்கும் இடம் அருகே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அதற்கு முன்பு தான் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. தமிழிசைக்கு அனுமதி கொடுத்துவிட்டு, செல்வப்பெருந்தகைக்கு மட்டும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதி கொடுக்காதது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
அங்கு நிற்பதற்கு மேலே இடமில்லை என்று முதலில் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதையடுத்து சிறிந்து நேரம் கழித்து, செல்வப்பெருந்தகைக்கு அங்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செல்வப்பெருந்தகை, "2,000 ஆண்டுகளாக நீடிக்கும் பிரச்சினையை ஒரே நாளில் தீர்த்துவிட முடியாது. அதிகாரிகள் மெத்தனப்போக்கை கடைப்பிடித்துள்ளதாகவும், முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கக் கூடாது என்பதற்காக மக்களோடு மக்களாக சாமி தரிசனம் செய்தேன்" என்று வருத்தத்துடன் கூறினார்.
நேரில் சந்தித்த சேகர் பாபு
இந்த நிலையில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செல்வப்பெருந்தகையை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் நடைபெற்ற சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி, அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர் பாபு உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
வருத்தம் தெரிவித்தார்
இன்று (08.07.2025) மாலை இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு எனது இல்லத்தில் என்னை சந்தித்தார். நேற்று, திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அண்ணன் தலைமையில் நடைபெறும் நல்லாட்சிக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்ட அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து, வருத்தம் தெரிவித்தார்.
முற்றுப்புள்ளி வைப்போம்
நடைபெற்ற சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி, அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அதிகாரிகள் செய்த தவறுக்கு, அனைத்துத் தரப்பினரையும் சமமாக நடத்தும் முதல்வர் ஸ்டாலினின் நற்பெயருக்கும், மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் அவர்களுக்கும் இச்சம்பவம் குறித்து எந்தவித களங்கமும் ஏற்படுத்த வேண்டாம். மேலும், இத்துடன் இந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம். இது குறித்து வருத்தம் தெரிவித்த ஜனநாயக சக்திகளுக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications