ஃபாஸ்டிங் சுகர் அதிகமாக இருக்கிறதா.. கட்டுப்படுத்த ஈஸி வழிகள் இதோ.. டாக்டர் பரூக் அப்துல்லா டிப்ஸ்
சென்னை: டான் ஃபினாமினன் ( DAWN PHENOMENON ) விளைவால் காலை ஃபாஸ்டிங் சுகர் அதிகமாகுவதைக் கட்டுப்படுத்த சில வழிகள் இருப்பதாக டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: நீரிழிவு நோய் உள்ள சிலருக்கு
காலையில் எடுக்கப்படும் க்ளூகோஸ் அளவுகள் வரம்புக்கு மீறி இருப்பதைக் காண முடிகிறது. இதற்கு டான் ஃபினாமினன் எனும் இயற்கையான உடல் இயங்குவியல் நியதி தான் காரணம் என்று பார்த்தோம்.
இந்த டான் ஃபினாமினன் மூலம் க்ளூகோஸ் ஏற்றம் காண்பதை எதுவரை சகித்துக் கொள்ளலாம் என்பதைப் பார்ப்போம். முதல் கேஸ் சினாரியோ- ஒருவருக்கு காலை வெறும் வயிற்றில் எடுக்கப்படும் க்ளூகோஸ் 100க்கு மேலே 130க்குள் இருக்கிறது.
இந்தி பேசினால் பலாத்காரம் செய்ய மாட்டார்கள்.. ஆஹா! அப்படியா சொன்னார் ஆலிஷா அப்துல்லா? உண்மை என்ன?
குளூகோஸ் அளவு
சாப்பிட்ட பிறகு எடுக்கப்படும் க்ளூகோஸ் சரியான அளவுகளில் இருக்கிறது. HBA1C எனப்படும் மூன்று மாத சராசரி க்ளூகோஸ் அளவும் சரியாகவே இருக்கிறது. அதிகாலை வெறும் வயிற்றில் எடுக்கப்படும் ஃபாஸ்டிங் இன்சுலின் அளவுகள் அதிகமாக இல்லாமல் சரியாக இருப்பின் இவருக்கு டான் ஃபினாமினன் மூலம் பெரிய தொந்தரவுகள் இல்லை. எனவே இவருக்கு எந்த மாற்றமும் தேவையில்லை .
காலை வெறும் வயிற்றில் உணவு
கேஸ் சினாரியோ 2- இவருக்கு காலை வெறும் வயிற்றில் சுகர் 130க்கும் மேல் இருக்கிறது. சாப்பிட்ட பிறகு சரியாக இருக்கிறது. HBA1C 7 க்கு மேல் இருக்கிறது. ஃபாஸ்டிங் இன்சுலின் நார்மலுக்கும் அதிகமாக இருக்கிறது என்றால் இவருக்கு அதிகாலை இன்சுலின் சுரப்பு நிகழ்ந்துள்ளது. தேவைக்கு மிகுதியாகவும் இன்சுலின் சுரப்பு நிகழ்ந்துள்ளது.
இன்சுலின்
ஆனால் சுரக்கப்பட்ட இன்சுலின் சரியாக அதன் பணியை செய்ய மாட்டேன் என்கிறது. இவருக்கு இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் பிரச்சனை இருக்கிறது என்று பொருள். எனவே இன்சுலினை சரியாக வேலை செய்ய வைக்கத் தேவையானவற்றை செய்தால் இவரது பிரச்சனை சரியாகும். இன்சுலினை சரியாக வேலை செய்ய வைக்க அவர் மாலை நேரங்களில் மிதவேக நடை பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
இன்சுலினை வேலை செய்ய வைக்கும் மருந்து
இரவு உணவை எவ்வளவு சீக்கிரம் சாப்பிடுகிறோரோ அது அவருக்கு நல்லது. இரவு உணவை மாலை ஆறு மணிக்குள் முடிப்பது சிறந்தது. அதற்குப் பிறகு எந்த உணவையும் உட்கொள்ளக் கூடாது. இரவு உணவில் மாவுச்சத்தை விட புரதச்சத்து அதிகமாக இருக்குமாறு அமைத்துக் கொள்வது நல்ல பயனளிக்கும். கூடவே இன்சுலினை நன்றாக வேலை செய்ய வைக்கும் மருந்தை மருத்துவர் பரிந்துரையில் பெற்று உட்கொள்வது சிறந்தது.
கல்லீரல்
இதன் மூலம் அதிகாலை கல்லீரலில் இருந்து க்ளூகோஸ் வெளியேற்றப்படுவதை மட்டுப்படுத்திட இயலும். இவர்களுக்கு இன்சுலின் சுரப்பில் பிரச்சனை இல்லை என்பதால் இன்சுலினை மேலும் தூண்டும் மருந்துகள் குறைவான பயனையே தரக்கூடும். இன்னும் மாவுச்சத்தானது நமது உடலால் கிரகிக்கப்படுவதை மட்டுப்படுத்தும் மருந்துகளும் இந்த பிரச்சனையை கட்டுக்குள் கொண்டு வர பயன்படும்.
நீரிழிவு நோய்
கேஸ் சினாரியோ 3 - இவர்களுக்கு காலை வெறும் வயிற்றில் சுகர் அதிகமாக இருக்கும். இவையன்றி நாளின் பல பகுதிகளில் டெஸ்ட் செய்து பார்த்தாலும் சுகர் நார்மலாக இருக்காது. Hba1c அதிகமாக இருக்கும். ஃபாஸ்டிங் இன்சுலின் குறைவாக இருக்கும். இவர்களுக்கு LADA ( LATENT AUTOIMMUNE DIABETES IN ADULT)எனும் ஆட்டோ இம்யூன் நீரிழிவு நோய் ஏற்பட்டிருக்கக் கூடும்.
இன்சுலின் சுரப்பு இருக்காது
அதன் விளைவாக இவர்களுக்கு முறையான இன்சுலின் சுரப்பு இருக்காது. உணவு சாப்பிட்ட பின் சுரக்க வேண்டிய அளவு தேவையான இன்சுலினை கணையம் சுரக்கிறது குறை மாவு பேலியோ உணவு முறையில் இருந்தாலும் இவர்களுக்கு சர்க்கரை அளவுகள் கட்டுப்பட மறுக்கும். நீரிழிவு கண்டறியப்படும் 5-10% பேர் இந்த வகையில் வருவார்கள். இவர்களுக்கு குறை மாவு உணவு முறையுடன் சேர்த்து போல இன்சுலினும் மாத்திரைகளும் தேவைப்படும். இப்படியாக மூன்று சினாரியோக்களில் நீரிழிவு நோயர்கள் இருப்பதைக் கண்டுகொள்ள முடியும்.
டான் ஃபினாமினன் விளைவைக் குறைக்க
- முன்கூட்டியே மாலையில் ஒரு நாளின் இறுதி உணவை முடித்துக் கொள்ள வேண்டும் . அதற்குப்பிறகு எதையும் உண்ணக்கூடாது. ஆறு முதல் எட்டு மணிக்குள் இரவு உணவு இருந்தால் நல்லது.
- இரவு உணவில் மாவுச்சத்தை குறைத்து புரதச்சத்து நிறைவாகப் பெறுதல்
- மாலை வேளையில் நல்ல உடற்பயிற்சி செய்ய வேண்டும்
- கவலையின்றி இரவில் 7 முதல் 8 மணிநேரம் உறங்க வேண்டும்.
நன்றாக உறங்கினால் தான் கார்டிசால் சுரப்பைக் கட்டுக்குள் வைக்க முடியும். கார்டிசால் சுரப்பு கட்டுக்குள் இருந்தால் தான் ரத்த க்ளூகோஸ் அளவுகளும் கட்டுக்குள் இருக்கும்.
- மனப்பதட்டம் இல்லாத அமைதியான வாழ்க்கை முறை
- முறையான இன்சுலின்/ மாத்திரைகளை உட்கொள்ளுதல் மருத்துவரிடம் முறையான கண்காணிப்பில் இருந்து வருதல். ரத்தப் பரிசோதனைகளை தேவையானபோது எடுத்தல். மேற்சொன்ன விஷயங்களைச் செய்வதன் மூலம் டான் ஃபினாமினனை சிறப்பாகக் கட்டுக்குள் வைக்க இயலும். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.