சோதனைகள் மனிதனுக்கு புதிதல்ல! ஒமிக்ரான் பரவலை பார்த்து ரொம்ப பயம் வேண்டாம்! சொல்கிறார் டாக்டர்
சென்னை: தென் ஆப்ரிகாவிலிருந்து உலகம் முழுவதும் வேகம் எடுத்துள்ள ஒமிக்ரான் வைரஸ் குறித்த ஒரு அலசல் தொகுப்பை ஒன் இந்தியா தமிழ் வாசகர்களுக்காக கொடுத்திருக்கிறார் மருத்துவர் ஹக்கீம்.
கொரோனா தடுப்பூசி திருச்சி மாவட்ட நோடல் அதிகாரியாகவும், அவசர சிகிச்சை பிரிவு மருத்துவராகவும் உள்ள இவர் ஒமிக்ரான் வைரஸ் பரிணாமம் குறித்து தனது சிறப்புக் கட்டுரையில் விளக்கியிருக்கிறார்.

புதிய பரிணாமம்
''கொரோனா வைரஸின் புதிய பரிணாமத்திற்கு ஒமைக்ரான் என்ற பதினைந்தாவது கிரேக்க எழுத்து பெயராக சூட்டப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்ட பல நாடுகளில் இந்த பரிணாமம் பெற்ற வைரஸ் வகை அதிவேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் முதலில் கர்நாடகத்தில் காணப்பட்ட ஓமைக்ரான் இப்போது டில்லி, மகாராஷ்டிரம், வங்காளம், ஆந்திரா, தமிழகத்திலும் இப்போது காணப்படுகிறது. தமிழகத்தில் முதன்முதலில் கடந்த பதினைந்தாம் தேதி அன்று நைஜீரியாவிலிருந்து வந்த பயணி ஒருவரிடம் ஒமைக்ரான் காணப்பட்டுள்ளது.''

தகவல் இல்லை
''மரபணு மாற்றம் அடைந்துள்ள இந்த வகை கொரோனா வைரஸ், எளிதில் பரவக்கூடிய தன்மை அடைந்துள்ளது. அதன் மேற்புறத்தில் உள்ள புரத அமைப்பு-சுமார் 32 ஸ்பைக் புரதங்களின் அமைப்பு இந்த ஒமைக்ரான் வகையில் மாற்றம் அடைந்துள்ளது. இந்த மாற்றங்களினால் முன்பை விட அதிகம் பரவும் தன்மை வாய்ந்த கிருமியாக இது மாறியுள்ளது. வேகமாக பரவுவதால் அதிக நோய் உண்டாக்கும் சக்தியோ அல்லது இறப்பு விகிதமோ ஏற்படுவதாக இன்றுவரை எந்த விதமான ஆதாரப்பூர்வ தகவலும் இல்லை.''

தென் ஆப்ரிக்கா
''முதன் முதலில் இந்த வகை நோய் கிருமி கண்டுபிக்கப்பட்ட இடம் தென் ஆப்ரிக்காவாகும். கடந்த நவம்பர் 9 ஆம் தேதி முதலில் இந்த வகை கிருமியின் மரபணுவை பிரித்து உள்ளனர், அந்த நாட்டில் உள்ள ஒமைக்ரான் முன் பின் புள்ளி விவரங்களை நாம் பார்ப்போம். நவ்-9 அந்த நாட்டில் உள்ள புதிய கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை 245 ஆக இருந்த சூழலில், டிசம்பர் 16 ஆம் தேதியில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 24,785 ஆக உயர்ந்தது. எனினும் நவ்-9 ஆம் தேதி காணப்பட்ட 35 மரணங்கள் டிசம்பர் 16 ஆம் தேதி 36 மறணங்களாகவே காணப்பட்டது. இதிலிருந்து நாம் இந்த புதிய வகை வைரஸ் அதிக மரணம் ஏற்படுத்தவில்லை என நாம் அறிந்து கொள்ளலாம்.''

வல்லுநர்கள்
''ஆனால் தென் ஆப்ரிக்கா நாட்டில் அதிக நபர்கள் ஏற்கனவே கோரொனாவால் பாதிக்கப்பட்டதும், பெருவாரியான மக்கள் கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்டதும் குறிப்பிடதக்கது. ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 90% மருத்துவமனை சேர்க்கை இன்றி நோயிலிருந்து மீளுவதாக வல்லுனர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரியவருகிரது. எனினும் வேகமாக பரவுவதால் இந்த வகை கிருமி ஒரு சில பாதிப்புகள் குறிப்பாக காய்ச்சல், தலைவலி, சோர்வு, பசியின்மை, தற்காலிக வாசம் இழப்பு போன்ற லேசான நோய் அறிகுறிகள் ஏற்படுத்துவதாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.''

அலட்சியம் வேண்டாம்
''நோய் தாக்குதல் விகிதம் அதிகம் இல்லை என பொது மக்கள் அலட்சிய போக்கினை எடுக்கக்கூடாது. இதற்கு முந்தைய அலைகளை போலவே கோவிட் நோய் ஏற்படாதவர்களும், தடுப்பூசி எடுத்து கொள்ளதவர்களும் பாதிப்படைய கூடிய மக்களாக இருக்க வாய்ப்புள்ளது என உலக சுகாதார துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. முதல் அலை பின் வந்த இரண்டாவது அலையில் நாம் அதிக பாதிப்பினை சந்தித்து மீண்டுள்ளோம். அதனை மனதில் வைத்து கொண்டு பொது மக்கள் ஒமிக்ரான் நோய்க்கான சமுதாய நெறிகளை கடைப்பிடிக்க வேண்டும்.''

அறிவுரை
''தேவையற்ற பயணத்தை மக்கள் முற்றிலுமாக தவிர்ப்பது வேண்டும், அவசியமற்று கூட்டம் கூடுவதை தகர்க்க வேண்டும், தவிர்க்க கூடிய குடும்ப நிகழ்ச்சிகளை தவிர்ப்பது, அதிகம் கூட்டம் இல்லாமல் இல்ல நிகழ்ச்சிகளை நடத்துதல் வேண்டும். முக்கியமாக பணி இடம், வேலை இடம், பயண நேரம், கடைகளில் ஆகிய அந்நிய மனிதருடன் தொடர்பு கொள்ளும் சமூக இடங்களில் முக கவசம் அணிந்து இருப்பது, இடைவெளி கடைபிடிப்பது, கிருமி நாசினி உபயோகிப்பது போன்ற கோவிட் சமூக விதிகளை கடைபிடிக்க வேண்டும்.''

மரபணு மாற்றம்
''சமூக கூடங்கள், உள்ளரங்கு விளையாட்டு களங்கள், மால், சினிமா அரங்குகள் போன்று நெருக்கமாக பொதுமக்கள் கூடும் இடங்களை தவிர்க்க வேண்டும். பண்டிகை காலம் அருகில் இருப்பதால் மக்கள் கடைவீதிகள் சென்று கூட்டமாக கூடுவதை தவிர்க்கலாம். இன்று வரை உள்ள தகவலின் படி, முதல் இருந்த வைரஸ் வகையை விட இந்த வகையில் கிட்ட தட்ட 50 மரபணு மாற்றங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இந்த வகை வைரஸிற்கு எதிரான தடுப்பூசியின் செயல் திறன் விகிதம் பற்றி இன்னும் பல ஆராய்ச்சிகள் செயல்பாட்டில் உள்ளன. எனினும் அதிக மரபணு மாற்றங்கள் இருப்பதால் வல்லுனர்கள் கடும் எச்சரிக்கைகளை விடுத்து உள்ளனர்.''

கடைபிடித்து
''மக்கள் தங்கள் கையில் உள்ள பொறுப்புகளை உணர்ந்து தடுப்பூசி எடுத்து கொள்ளாதவர்கள் தடுப்பூசி எடுத்து கொண்டு, ஒரு முறை எடுத்தவர்கள் இரண்டாம் முறை எடுத்து தங்கள் தடுப்பூசியை முடிக்க வேண்டும். சமூக இடைவெளி, முக கவசம், கிருமிநாசினி போன்றவற்றை கடைபிடித்து வந்தால் இந்த ஆபத்தை நாம் இழப்புகள் இல்லாமல் கடக்கலாம்.''
Recommended Video

சோதனைகள் புதிதல்ல
''சோதனைகள் மனிதனுக்கு புதிதல்ல, டார்வின் கூறுவது போல எந்த ஒரு உயிரினம் சூழ்நிலைக்கேற்ப தன்னை பொருத்தி கொள்கின்றதோ அது நிலைக்கும். எனவே நாமும் நம் சூழ்நிலையின் நிலையை அறிந்து செயல் பட்டு இந்த ஆபத்தினை கடப்போம்.''












Click it and Unblock the Notifications