பசுமைத் தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினர் பதவி.. கிரிஜா வைத்தியநாதன் மறுப்பு.. சத்யகோபால் நியமனம்
சென்னை: பசுமைத் தீர்பபாயத்தின் நிபுணத்துவ உறுப்பினர் பதவியை தான் ஏற்க போவதில்லை என கிரிஜா வைத்தியநாதன் கடிதம் அளித்த நிலையில் அப்பதவிக்கு சத்யகோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தமிழக தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் பொறுப்பேற்றார். இவரது பதவிக்காலம் முடிந்தது. இந்த நிலையில் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார்.
இவரது நியமனத்திற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சுற்றுச்சூழல் சார்ந்த விஷயத்தில் போதிய அனுபவம் இல்லாத கிரிஜாவை அப்பதவியில் நியமிக்க தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வழக்கு தொடர்ந்தது.
இதையடுத்து கிரிஜா பதவியேற்க இடைக்கால தடையை நீதிமன்றம் விதித்தது. இந்த நிலையில் இந்த வழக்கு கடந்த 17-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கிரிஜாவின் நியமனம் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் நிபுணத்துவ உறுப்பினராக தென்னக அமர்வில் பொறுப்பேற்க போவதில்லை என கிரிஜா வைத்தியநாதன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முன்னாள் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். கிரிஜா நியமனம் செல்லும் என உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.