தமிழகத்தில் ஜூலை மாதம் கொரோனா பாதிப்பு 2.70 லட்சமாக உயரும்.. எம்ஜிஆர் பல்கலை ஆய்வில் தகவல்
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அடுத்த மாதம் 2.70 லட்சமாக உயரும் என தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை, தமிழகத்தில் வரும் நாட்களில் கொரோனாவின் தாக்கம் எப்படி இருக்கும், எத்தனை பேருக்கு தொற்று பரவும்?
எத்தனை பேர் இறக்க நேரிடும் என்பது குறித்து தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இந்தியாவில் மிகஅதிக உச்சம்- ஒரே நாளில் 15,968 பேருக்கு கொரோனா- 465 பேர் மரணம்
ஊரடங்கு
இந்த ஆய்வு முடிவில் சென்னையில் கொரோனா தொற்று அக்டோபர் மாதம் உச்சநிலையை அடையும். நோய் தடுப்பு நடவடிக்கைகளை பொறுத்தே கொரோனாவின் 2ஆவது அலை முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது. மேலும் தற்போது சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2.70 லட்சம்
இதனால் சென்னையில் கொரோனா உச்சநிலையை அடையும் வேகம் குறையும். அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் கொரோனா வைரஸ் தாக்கம் உச்சநிலையை அடையும் . இன்னும் சில வாரங்களில் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும். அதன்படி அடுத்த ஜூலை மாதம் மத்தியில் தமிழகத்தில் 2.70 லட்சம் மக்களுக்கு தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளது.
சென்னை
அந்த 2.70 லட்சம் பேரில் 60 சதவீதம் சென்னையில் இருக்கும். இதுகுறித்து தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷையன், தொற்றுநோய்த் துறைத் தலைவர் டாக்டர் ஜி. ஸ்ரீனிவாஸ் ஆகியோர் கூறுகையில், சென்னையில் ஜூன் மாத இறுதியில் 71 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்.
உச்சநிலை
இந்த எண்ணிக்கை ஜூலை 15 இல் 1.5 லட்சமாக அதிகரிக்கலாம். எங்கள் கணிப்பின்படி ஜூன் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு 71 ஆயிரத்தை எட்டும், தமிழகம் முழுவதும் 1.22 லட்சமாக உயரும். ஜூலை 1-ஆம் தேதி சென்னையில் 71,715 பேருக்கும் தமிழகத்தில் 1.29 லட்சம் பேருக்கும் நோய் பரவும். சென்னையில் ஜூலை 15-ஆம் தேதி 1.50 லட்சம் பேருக்கு கொரோனா பரவல் இருக்கும். தமிழகத்தில் 2.76 லட்சமாக பரவும் என எதிர்பார்க்கிறோம். சென்னையில் கொரோனா உச்ச நிலையை அடைந்த பிறகு படிப்படியாக குறையத் தொடங்கும். ஊரடங்கின் விளைவுகளை இன்னும் 10 நாட்களில் காணலாம் என்றார்.