சென்னை இதய பகுதியில் முக்கிய மேம்பாலம் இடிப்பு.. அந்த பக்கம் போனால் கவனம்.. என்ன காரணம் தெரியுமா
சென்னை: தலைநகர் சென்னையில் இப்போது மெட்ரோ கட்டுமானம் நடந்து வரும் நிலையில், அதில் நகரில் இதய பகுதியில் உள்ள முக்கிய மேம்பாலத்தை இடிக்கும் பணிகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளது.
சென்னையில் இப்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது. இது தவிர இப்போது கூடுதலாக 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

இவை முழுமையாகப் பயன்பாட்டிற்கு வந்தால் விரிவான ஒரு மெட்ரோ சேவையைக் கொண்ட நகரமாகச் சென்னை மெட்ரோ மாறும்
மேம்பாலம் இடிப்பு: இதற்கிடையே சென்னை ராயப்பேட்டை - டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் உள்ள மேம்பாலத்தை இடிக்கும் பணியைச் சென்னை மெட்ரோ நிர்வாகம் ஆரம்பித்துள்ளது. இந்த மேம்பாலத்தை இடிக்கும் பணி இரண்டு மாதங்களில் முடிவடையும்.. டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சுரங்க மெட்ரோ ரயில் நிலையம் கட்டப்படும் வரை இந்த பகுதியில் போக்குவரத்து மாற்றமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கே மெட்ரோ நிலைய கட்டுமானம் முடிந்து மீண்டும் டிராபிக் பழையபடி வர 3 ஆண்டுகள் வரை ஆகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ராயப்பேட்டையில் உள்ள மேம்பாலத்தின் ஒரு பகுதி நிலத்துக்கடியே அமையும் மெட்ரோ ரயில் நிலையத்திற்காக இடிக்கப்படுகிறது. மேம்பாலத்தின் ஒரு பகுதியை இடிக்கும் பணியைச் சென்னை மெட்ரோ நிர்வாகம் திங்கள்கிழமை (ஜனவரி 22) மாலை தொடங்கியது.

மெட்ரோ ரயில் நிலையம்: பூமிக்கு அடியில் அமையும் இந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை மெட்ரோ ரயில் நிலையம் என்பது மாதவரம் முதல் மயிலாப்பூர் வழியாக சிப்காட் வரை இணைக்கும் 3ஆவது வழித்தடத்தில் வருகிறது. இந்த ஸ்டேஷன் மேம்பாலத்தின் அஸ்திவாரம் அமைந்துள்ள அதே இடத்தில் தான் அமைகிறது. இதன் காரணமாகவே ராயப்பேட்டை திசையில் அமைந்துள்ள மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிக்கப்படுகிறது.
இது குறித்து சென்னை மெட்ரோ அதிகாரிகள் கூறுகையில், "ஓரிரு மாதங்களில் மேம்பாலத்தை இடிக்கும் பணிகள் முடிவடையும், நிலையத்தின் கட்டுமானம் முடியும் வரை போக்குவரத்து மாற்றம் தொடரும். இந்த மெட்ரோ நிலையம் நிலத்திற்கு அடியில் 15-18 மீட்டரில் அமையும். இந்த மெட்ரோ நிலையத்திற்கு இரண்டு நுழைவாயில்கள் இருக்கும்.
3 ஆண்டுகள் ஆச்சு: அதன் பிறகு நிலத்திற்கு அடியில் அமைக்கும் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கும். இந்த பணிகள் முடிவடைய சுமார் மூன்று ஆண்டுகள் ஆகும். அதன்பின் மீண்டும் மேம்பாலத்தைப் புனரமைப்போடு, பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும். எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இந்த முழுப் பகுதியை முழுமையாக மூடி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கவனமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.
ரூ.61,843 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இந்த இரண்டாம் கட்டத் திட்டத்திற்காகச் சென்னையில் இடிக்கப்படும் ஒரே மேம்பாலம் இது மட்டும் இல்லை. அடையாறு பகுதியில் அமைந்துள்ள மேம்பாலத்தின் ஒரு பகுதியும் மெட்ரோ கட்டுமானத்திற்காக இடிக்கப்பட உள்ளது. இதுவும் மூன்றாவது வழித்தடத்தில் தான் அமையப் போகிறது.
இது தவிரக் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி, (மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை இணைக்கும் மற்ற இரு வழித்தடங்களிலும் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. 2026 தொடக்கத்தில் இருந்து இந்த மெட்ரோ ரயில் படிப்படியாக இயங்க ஆரம்பிக்கும் எனத் தெரிகிறது. இருப்பினும், இவை முழுமையாகச் செயல்பாட்டிற்கு வர 2028 வரை ஆகும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications