மே-24 முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் இல்லாத கடுமையான ஊரடங்கு- டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
சென்னை: தமிழகத்தில் மே 24-ந் தேதி முதல் ஒரு வாரத்துக்கு தளர்வுகள் இல்லாத கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 24-ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் இல்லாத கடுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இது நல்ல முடிவு

தளர்வுகள் இல்லாத ஊரடங்கு என்பது சாலைகளில் காக்கை - குருவிகள் நடமாட்டம் கூட இல்லாததாக இருக்க வேண்டும். இந்த வரையறைக்கு ஏற்ற வகையில் முழு ஊரடங்கு கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அப்போது கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும்!
கடுமையான ஊரடங்குக்கு முன் அத்தியாவசியப் பொருட்களை வாங்க இன்றும், நாளையும் கடைகள் திறக்கப்படும் போது அவற்றில் கூட்டம் கூடுவதை தடுக்க வேண்டும். பொதுமக்கள் தேவைப்பட்டால் மட்டுமே வெளியில் வந்து பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும்!

இன்றும், நாளையும் அனைத்துக் கடைகளையும் திறக்க அனுமதிப்பது தேவையற்றது. அதை மறு ஆய்வு செய்ய வேண்டும். அத்தியாவசியப் பொருள் கடைகளைத் தவிர மற்றக் கடைகளை திறப்பது தேவையின்றி கூட்டம் கூடவும், கொரோனா தொற்று பரவுவதற்கும் மட்டுமே வழிவகுக்கும் இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications