ஜெயலலிதா முன்கூட்டியே இறந்ததை கண்டுபிடித்த 'எம்பாமிங் ' டாக்டர் சுதா சேஷய்யன்: ஆறுமுகசாமி ஆணையம்
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்கூட்டியே இறந்துவிட்டார் என்பதை அவரது உடலை எம்பாமிங் எனப்படும் பதப்படுத்துதல் செய்த எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் கண்டறிந்துவிட்டார் என நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் சசிகலா உள்ளிட்ட 8 பேர் மீதான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

டிச. 4 மாலை மரணம்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக டாக்டர் சுதா சேஷய்யன் கண்டறிந்தது குறித்து ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாவது: டிசம்பர் 4-ந் தேதி பிற்பகல் 2 மணிக்குப் பின் ஜெயலலிதாவின் சிகிச்சை அறையில் சலசலப்பு ஏற்பட்டதாக பூங்குன்றனர் கூறினார். மகேஸ்வரி என்ற செவிலியர், தான் பிற்பகல் 2 மணிக்கு பணிக்கு வந்தேன்; ஜெயலலிதா தம்மை டிவியை ஆஃப் செய்ய சொன்னார்; பின்னர் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது என கூறினார்.

டிசம்பர் 4-ல் உயிருடன் இல்லை
நளினி என்பவர் டிசம்பர் 4-ந் தேதி பிற்பகல் 3.50 மணி எக்கோ எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக கூறினார். ஆனால் எந்த நேரத்தில் இதய செயலிழப்பு ஏற்பட்டது என தெரியாது என்றார். அதன் பின்னர் இதய மசாஜ் செய்தனர். ஸ்டெர்னோடமி செயல்முறையை தொடங்குவதற்கு முன்பு ஜெயலலிதாவுக்கு ரத்தப் போக்கு அல்லது ரத்த ஓட்டம் இல்லை. ஆகையால் அப்போதே அவர் உயிருடன் இல்லை என்பதையே அது குறிக்கிறது. ராஜீவ் காந்தி மருத்துவமனை டீன் கூறுகையில், உடலில் ரத்த ஓட்டம் இருந்தால் ஸ்டெர்னோடமியின் போது தோல் வெட்டப்பட்டால் ரத்தம் வரவேண்டும்; சிபிஆர் செய்தால் அதிக ரத்தம் வெளியேறும் என்றார்.

எம்பாமிங் போது கண்டுபிடிப்பு
ஜெயலலிதாவின் உடலை எம்பாமிங் செய்வதற்கு டாக்டர் சுதா சேஷய்யன், இரவு 11.30 மணியளவில் தொடங்கிய போது, ஜெயலலிதா எம்பாமிங் செய்வதற்கு 10 முதல் 15 மணிநேரத்துக்கு முன்னரே இறந்துவிட்டார் என கண்டறிந்தார். அதாவது டிசம்பர் 4-ந் தேதி மாலை 3.50 மணிக்கு ஜெயலலிதாவின் மரணம் உறுதி செய்யப்பட்டது; அதன் பின்னர் ஸ்டெர்னோடமி, எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அழைப்பு என்பது எல்லாம் முற்றிலும் நேரத்தைப் போக்குவது; வீணானது என்பது மிகவும் தெளிவகிறது.

உள்நோக்கம்
சிபிஆர் செய்து 45 நிமிடங்களுக்குப் பின் இதயம் செயல்படவில்லை என்றால் நோயாளி இறந்துவிட்டார் என அறிவிப்பார்கள். ஆனால் ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் நேரத்தை நீட்டித்தனர். சுயநலம் கருதி, ஜெயலலிதாவுக்கு மூளைச் சாவு ஏற்படாதது போல தங்களை திருப்திப்படுத்த கேஸ் ஷீட்டில் ஒப்புதல் அளித்துள்ளனர். இவ்வாறு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications