வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களை மீண்டும் சேர்ப்போம் - உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையில் 97.37 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டது. இந்நிலையில் தான் வாக்காளர் பட்டியலில் விடுபடடவர்களை சேர்க்க முயற்சிகளை செய்வோம் என்று தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
தமிழகத்தில் ‛சார்' எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர நடவடிக்கை கடந்த மாதம் 4ம் தேதி தொடங்கியது. ‛சார்' விண்ணப்ப படிவங்களை பூர்த்தியிட்டு டிசம்பர் 14ம் தேதி வரை வழங்க காலஅவகாசம் வழங்கப்பட்டது.

இதையடுத்து இன்று மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் இருந்த 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 என்ற வாக்காளர்களின் எண்ணிக்கை தற்போது 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 ஆக சரிந்துள்ளது. அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் மட்டும் 14,25,018 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் வாக்காளர பட்டியலில் இருந்து 97.37 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டது பற்றி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் இன்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு உதயநிதி ஸ்டாலின், ‛‛இதனை ஆரம்பத்தில் இருந்து திராவிட முன்னேற்ற கழகத்தினரும், முதலமைச்சரும் எதிர்த்து வந்தோம். ஒரு மாதம் போதாது.
இன்னும் காலஅவகாசம் வேண்டும் என்று கூறியிருந்தோம். நாளை, நாளை மறுநாள் ஆன்லைனில் பார்த்தால் தான் யார் யாரை நீக்கி உள்ளார்கள் என்பது தெரியும். அதன்பிறகு விடுபட்டவர்களை சேர்க்க முயற்சி செய்வோம்'' என்றார்.
இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த தீவிர நடவடிக்கையில் முதல்வர் ஸ்டாலினின் சொந்த தொகுதியான சென்னை கொளத்தூரில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 287 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அதேபோல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் சொந்த தொகுதியான சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிில் 89,241 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
அதிகபட்சம் என்று பார்த்தால் சென்னை வேளச்சேரி தொகுதியில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 521 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications