"இந்தி திணிப்பை நிறுத்துங்கள்.." சென்னையில் திராவிட சிட்டி மூவ்மென்ட் சார்பில் மாபெரும் போராட்டம்!
சென்னை: இந்தி திணிப்பிற்கு எதிராக திராவிட சிட்டி மூவ்மென்ட் (Dravida City Movement) என்ற அமைப்பு சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது.
Recommended Video
இந்தியாவில் மீண்டும் இந்தி திணிப்பிற்கு எதிரான கோஷங்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளன. முன்பு தமிழ்நாட்டில் மட்டும் கேட்டுக்கொண்டிருந்த இந்த எதிர்ப்பு தற்போது கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் என்ற மற்ற இந்தி அல்லாத மாநிலங்களிலும் கேட்க தொடங்கி உள்ளன.
இந்த நிலையில்தான் இந்தி திணிப்பிற்கு எதிராகவும், இந்தி பிரச்சார சபைகளுக்கு எதிராகவும் திராவிட சிட்டி மூமென்ட் என்ற அமைப்பு சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த அமைப்பை சேர்ந்த பல்வேறு தமிழர்கள், தெலுங்கர்கள், கன்னடர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்தி எதிர்ப்பு போராட்டம்
இந்தி திணிப்பிற்கு எதிராக இந்த போராட்டத்தில் அவர்கள் கடுமையான கோஷங்களை எழுப்பினர். திராவிட சிட்டி மூவ்மென்ட் அமைப்பிற்கு தென்னிந்தியா முழுக்க கிளைகள் உள்ளன. இந்த கூட்டத்தில் பேசிய திராவிட சிட்டி மூவ்மென்ட் நிர்வாகி, தென்னிந்தியாவில் இருந்து இந்தி, சமஸ்கிருதத்தை நீக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். தென்னிந்தியாவில் உள்ள இந்தி பிரச்சார சபையை மூட வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை. இதற்காக 5 மாநில மக்கள் ஒன்று கூடி போராடி வருகிறோம். போராட்டத்திற்கு ஆதரவு பெரிதாக உள்ளது என்று தெரிவித்தார்.
நிர்வாகிகள் கோஷம்
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியை திணிக்காதே! இந்தியை திணிக்காதே!" என நாம் கத்துகிறோம் கதறுகிறோம். ஆனால் அவர்கள் அதைத் தந்திரமான வழிகளில் திணித்துக் கொண்டே இருக்கின்றார்கள். நாம் அதற்கு எதிர்வினை ஆற்றுவதை விடுத்து, இந்தித் திணிப்பை முழுவதுமாக நிறுத்துவதற்கான தீவிரமான வேலைகளைத் தொடங்குவோம். எண் 343 முதல் 351 வரையிலான சட்டப் பிரிவுகளை அமல்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்துவது அவசியம்.
மக்களின் வரிப்பணம்
இது நாம் வாக்களித்து தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளால் செய்ய முடியும். நாம் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளுக்கு அழுத்தம் தரும் வகையில், தென்னிந்திய இந்தி பிரச்சார சபையின் நடவடிக்கைகளைத் தடுக்கக்கோரி நாம் ஒரு போராட்ட மாநாட்டை நடத்த வேண்டும். மொழிப்போர்தியாகி 24 வயதான சின்னசாமி "ஒரே நாடு ஒரே மொழி" என்பதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் வேண்டாம் சமஸ்கிருதம் இந்தி! திராவிட மொழிகள் வாழ்க!" என்று முழங்கி 1964ம் வருடம் ஜனவரி 25ஆம் நாள், திருச்சி ரயில் நிலையத்தில் தீக்குளித்து உயிர் தியாகம் செய்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஒன்றிய அரசு 1964ம் வருடம் மே 12ஆம் நாள், இந்த சபையை நேசிய முக்கிய நிறுவனமாக ஆக்கி வருடாவருடம் சுமார் 500 கோடிருபாய் பணத்தை நிதி அளித்து, தரீதிரமாக திராவிட மொழிகளை அழித்து இந்தியைத் திணிக்க வழி செய்தது. என்ன இறுமாப்பு! ஒன்றிய அரசின் பணம் என்றால் அது திராவிட மக்களின் பணத்தையும் சேர்த்ததே
ஏன் சென்னையில் இந்த போராட்ட மாநாடு?
தென்னிந்திய இந்தி பிரச்சார சபை தென்னிந்தியா முழுவதும் இயங்கி வருகிறது. ஆனால் அதன் தலைமை அலுவலகம் சென்னையில் உள்ள தி நகரில் உள்ளது. இதுவே சென்னையில் நாம் மாநாட்டிற்காக ஒன்று கூடுவதற்கான காரணம் திராவிடக் கன்னட மக்கள், திராவிடத் தெலுங்கு மக்கள் திராவிடத் தமிழ் மக்கள், திராவிட மலையாள மக்கள் அனைவரும் கைகோர்த்து இந்தப் போராட்டத்தை முன்னெடுப்போம்.
வெறுப்பைப் பரப்பும் சங்கிகளே, தேசியவாதிகளே, என்ன இது?
நாங்கள் வடக்கு தெற்கு என்று சொன்னால் பிரிவினைவாதம் என்கிறார்கள். தென்னிந்திய இந்தி பிரச்சார சபை என்பது பிரிவினை இல்லையா? தென்னிந்தியப் பாராளுமன்றம் எங்கே? தென்னிந்திய உச்சநீதிமன்றம் எங்கே? தென்னிந்திய முன்னேற்ற ஆணையம் எங்கே? ஏன் வட இந்தியாவில் திராவிட மொழிகளின் பிரச்சார சபை இல்லை? தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா மாநில நண்பர்கள் வருகிறார்கள். நீங்களும் எங்களோடு இணையுங்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.