கேம் சேஞ்சர்! திமுக கையில் எடுக்கும் பிரம்மாஸ்திரம்.. யோசித்து பார்க்காத பிளான் போடும் அறிவாலயம்!
சென்னை: சட்டமன்றத் தேர்தல் களம் தமிழ்நாட்டில் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இந்தத் தேர்தல் களத்தில் ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) வெளியிடப்போகும் தேர்தல் அறிக்கை, அரசியல் அரங்கில் ஒரு பெரும் "அதிர்வை" (Banger) ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக-பாஜக கூட்டணி மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என மும்முனைப் போட்டி நிலவும் சூழலில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான தனது லட்சியத் திட்டங்களை திமுக மிக பிரம்மாண்டமாகத் தயார் செய்து வருகிது.

திட்டம்: செயற்கை நுண்ணறிவு மற்றும் நேரடி கள ஆய்வு
தேர்தல் அறிக்கையை நவீனப்படுத்த, திமுக ஒரு பிரத்யேக AI (செயற்கை நுண்ணறிவு)
இணையதளத்தையும் மொபைல் செயலியையும் அறிமுகப்படுத்தி, பொதுமக்களிடம் இருந்து நேரடியாகக் கருத்துகளைப் பெற்று வருகிறது. இந்தப் பணிகளை கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவி கனிமொழி கருணாநிதி தலைமையிலான உயர்மட்டக் குழு முன்னெடுத்து வருகிறது.
இக்குழுவில், திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன், திமுக சொத்து பாதுகாப்புக் குழுச் செயலாளரும், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளரும், தொழில்துறை அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா, திமுக அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா முன்னாள் எம்.பி., திமுக செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், திமுக மருத்துவ அணிச் செயலாளர் எழிலன் நாகநாதன், திமுக சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, திமுக மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் ஆ.தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ., இந்திய ஆட்சிப் பணி அலுவலர் (ஓய்வு) ஜி.சந்தானம், கனவு தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு, தற்போது 38 மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து வருகிறது:
தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயிகள் சங்கங்கள்
நலவாரியங்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள்
கூட்டணிக் கட்சிகள் (காங்கிரஸ் மற்றும் விசிக உட்பட) பலருடன் ஆலோசனைகளை செய்யும்.
கள நிலவரம்: சமூக நலன் vs "போட்டி அரசியலும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளும்
2026 தேர்தல் அறிக்கை, தற்போது மாநிலத்தில் நிலவும் "போட்டி அரசியலுக்கு" ஒரு நேரடி பதிலடியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அதிமுக தனது பிரச்சாரங்களில் மகளிர் உரிமைத் தொகையை ₹2,000 ஆக உயர்த்துவதாகக் கூறிவரும் நிலையில், திமுக தனது முத்திரைத் திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை இன்னும் பிரம்மாண்டமாக விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2021 தேர்தல் அறிக்கை அந்தத் தேர்தலின் 'ஹீரோ' என்றால், இம்முறை வெளிவரப்போகும் அறிக்கை பல வாரங்களுக்குத் தலைப்புச் செய்திகளில் நீடிக்கும் ஒரு 'பிளாக்பஸ்டர்' ஆக இருக்கும்," என்று திமுகவின் மூத்த நிர்வாகி ஒருவர் நம்பிக்கையோடு தெரிவித்தார்.
2026-க்கான திமுகவின் முக்கிய இலக்குகள்
சமூக நீதி, சாதி வாரி கணக்கெடுப்பு கோரிக்கையுடன் "திராவிட மாடல்" விரிவாக்கம், மாநில உரிமைகள், ஆளுநரின் அதிகாரங்களைக் குறைப்பது மற்றும் மாநில சுயாட்சிக்கு அதிக அழுத்தம், கல்வி, அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு (NEP) மாற்றாக மாநிலக் கல்விக் கொள்கை அமலாக்கம், பொருளாதாரம் தொடர்பா தீர்க்கமான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்தியல் போர்
இந்தத் தேர்தலை பாஜகவின் "இரட்டை எஞ்சின்" முழக்கத்திற்கு எதிரான ஒரு "கருத்தியல் போர்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் வர்ணித்துள்ளார். மத்திய அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாகக் குற்றம் சாட்டும் அவர், 2021-ல் அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீதத்திற்கும் மேலானவற்றைத் தனது அரசு நிறைவேற்றிவிட்டதாகக் கூறி 200-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றுவதே இலக்கு எனத் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்த அதிரடி தேர்தல் அறிக்கை இன்னும் சில வாரங்களில் வெளிவரவுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் இப்போதே திமுகவைச் சுற்றியே சுழலத் தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications