”வெளியாகிறது திராவிட மாடல் நூல்” முப்பெரும் விழாவுக்கு தயாராகும் திமுக.. அடுத்தடுத்து அதிரடி!
சென்னை: திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் நூல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு அரசு நிகழ்ச்சிகளிலும், ஒவ்வொரு திட்டத்தின் தொடக்க விழாவிலும் திராவிட மாடல் என்று பேசி வருகிறார்.
திராவிட மாடல் என்பது சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி அடிப்படையில் அனைவருக்கும், அனைத்து மாவட்டங்களுக்கும் சமமான வளர்ச்சியை ஏற்படுத்துதல் என்பதாகவே விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

திமுக முப்பெரும் விழா
இந்த நிலையில் திராவிட மாடல் பற்றிய கொள்கை, கோட்பாடு நூல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் முப்பெரும் விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அண்ணா பிறந்தநாள், பெரியாரின் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகின்றன. செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளை முன்னிட்டும், செப்டம்பர் 16 திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாளையும், செப்டம்பர் 17 பெரியாரின் பிறந்த நாளையும் சேர்த்து முப்பெரும் விழா திமுகவினரால் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

விருதுகள்
இந்த நாளில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதுடன், பொதுக் கூட்டத்தை நடத்துவதும் வழக்கம். அத்துடன் முப்பெரும் விழாவை முன்னிட்டு திமுக சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

டி.ஆர்.பாலுவுக்கு விருது
2022ம் ஆண்டு செப்.15ம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவினையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகளான பெரியார் விருது சம்பூர்ணம் சாமிநாதன், அண்ணா விருது இரா.மோகன், கலைஞர் விருது டி.ஆர்.பாலு எம்.பி., பாவேந்தர் விருது புதுச்சேரி சி.பி.திருநாவுக்கரசு, பேராசிரியர் விருது குன்னூர் சீனிவாசன் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.

கருணாநிதியின் கடிதங்கள்
இந்த முப்பெரும் விழாவின் போது 1968ம் ஆண்டு முதல் 2018 வரையில், திமுக தொண்டர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எழுதிய 4041 கடிதங்களின் தொகுப்பு நூல்கள் வெளியிடப்பட உள்ளது. இதுமட்டுமல்லாமல் 21,510 பக்கங்களில் கருணாநிதி எழுதிய அனைத்துக் கடிதங்களும் தொகுக்கப்பட்டு, 54 தொகுதிகளாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திராவிட மாடல் நூல்
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் கொள்கை, கோட்பாடுகள் அடங்கிய நூல் செப்.15ல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் கோட்பாடு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசிய உரைகளின் மையக் கருத்தை தொகுத்து திமுக புத்தகமாக வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. இந்த நூல் வெளியான பின்னர், திராவிட மாடல் குறித்து அனைத்து தரப்பினரும் எளிதாக புரிந்துகொள்வர் என்று திமுகவினரால் பேசப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications