போதை பொருள் கடத்தல்.. வெளியான ரகசியம்.. முதல்வர் மவுனம் சாதிப்பதா? குஷ்பு சாடல்
சென்னை: தமிழக முதல்வர், மாநிலத்தை போதைப்பொருளின் மையமாக மாற்றியுள்ளார் என்று பாஜக நிர்வாகி குஷ்பு கூறியுள்ளார். போதைப்பொருள் விற்பனை அதிகரித்து வருகிறது, எல்லாம் நன்றாக இருக்கிறது என ஆளும் அரசு மிகவும் வசதியாக பாசாங்கு செய்கிறது என்றும் குஷ்பு தெரிவித்துள்ளார்.
2000 கோடி ரூபாய் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் ஜாபர் சாதிக், வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியது.

டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை, டெல்லி சிறப்பு காவல்துறை நடத்திய சோதனையில் 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3,500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், அதன் மொத்த மதிப்பு ரூ. 2,000 கோடி எனவும் தெரிய வந்துள்ளது.
மேலும், இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்டது திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக் என்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. அதன் தொடர்ச்சியாக, அவர் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து, போதை பொருள் விவகாரம் தொடர்பாக ஆஜராகுமாறு ஜாபர் சாதிக் வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகாததால் ஜாபர் சாதிக் வீட்டுக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சீல் வைத்துள்ளனர்.
இந்த நிலையில், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.
முன்னதாக, திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக். போதை பொருள் வழக்கில் சிக்கியதையடுத்து, அக்கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். போதைப்பொருள் கடத்தலில் திமுகவினருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதை அடுத்து எதிர்கட்சியினர் கண்டன அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். பாஜக நிர்வாகி குஷ்புவும் ஆளும் திமுக அரசுக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
தமிழக முதல்வர், மாநிலத்தை போதைப்பொருளின் மையமாக மாற்றியுள்ளார். போதைப்பொருள் விற்பனை அதிகரித்து வருகிறது, எல்லாம் நன்றாக இருக்கிறது என ஆளும் அரசு மிகவும் வசதியாக பாசாங்கு செய்கிறது. சாதிக்பாஷா திமுக உறுப்பினர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர் என்பது வெளிப்படையான ரகசியம். மு.க ஸ்டாலின் மவுனமாக இருப்பது அவமானம் என்று பதிவிட்டுள்ளார் குஷ்பு.












Click it and Unblock the Notifications