அடேங்கப்பா! ஒரே ஒரு முருங்கை விலை ரூ. 50.. சென்னை கோயம்பேடு சந்தையில் 1 கிலோ ரூ. 400-க்கு விற்பனை!
சென்னை: காய்கறி சந்தைகளில் கடந்த சில மாதங்களாக முருங்கைக்காய் (முருங்கை) (முருங்கை காய்) உரிய விலை கிடைக்காமல் உதாசீனப்படுத்தப்பட்டு உதறித் தள்ளப்பட்டு வந்தது. ஆனால் இன்றைய நிலவரத்தில் முருங்கைக்காய் அதி உச்ச விலையைத் தொட்டு வருகிறது. ஒரே ஒரு முருங்கைக்காய் ரூ. 50க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காய் விலை ரூ. 400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே கோயம்பேடு சந்தையில் நேற்று ஒரு கிலோ முருங்கைக்காய் ரு300க்கு விற்பனை செய்யப்பட்டது.
அன்றாட உணவில் முருங்கைக்காய் மிக முக்கியமான காய்கறிகளில் ஒன்று, தமிழ்நாட்டில் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் பகுதிகளில் முருங்கை சாகுபடி அதிகம். இதனால் வேடசந்தூரில் முருங்கை பதப்படுத்தும் மையமும் அமைக்கப்பட்டது.

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் இருந்து கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களுகும் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மகாராஷ்டிராவின் நாசிக் மற்றும் குஜராத்தில் இருந்தும் தமிழ்நாட்டின் பல சந்தைகளுக்கு முருங்கைக்காய் கொண்டு வரப்படுகிறது.
தற்போது மழை காலம், பனிப்பொழிவு என்பதால் முருங்கை வரத்து வெகுவாக குறைந்துள்ளது. முருங்கை பிஞ்சுகள் கீழே உதிர்ந்து விழுவதால் முருங்கை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காய்கறி சந்தைகளுக்கான முருங்கைக்காய் வரத்து குறைந்து வருகிறது. இதனால் கோயம்பேடு, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட சந்தைகளில் முருங்கைக்காய் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று ஒரு முருங்கைக்காய் விலை ரூ50 முதல் ரூ55 வரை விற்பனை செய்யப்பட்டது. 1கிலோ முருங்கைக்காய் ரூ400 வரை விற்பனையானது. கடந்த சில நாட்களாக ரூ250 முதல் ரூ350 வரை விற்பனையான ஒரு கிலோ முருங்கைக்காய் இன்று ஒரேயடியாக ரூ400 -க்கு விற்பனையானது.












Click it and Unblock the Notifications