அதிமுக பொதுக்குழு! இந்த பகுதியில் செம டிராபிக் ஜாம் இருக்கும்.. சென்னை போலீஸ் முக்கிய அட்வைஸ்
சென்னை: வானகரத்தில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இது தொடர்பாகப் பெருநகர காவல் துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Recommended Video
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று வானகரத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை தொடர்பாக முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுக்குழு கூட்டம்
இதற்காக வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. நேற்று மாலை தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். நெடுஞ்சாலை முதல் கூட்டம் நடைபெறும் மண்டபம் வரை அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்கள் இடம் பெற்றுள்ளன. அதேநேரம் ஒ.பன்னீர்செல்வத்தின் படங்கள் எங்கும் இடம் பெறவில்லை.

அறிவிப்பு
கடந்த மாதம் அதிமுக பொதுக்குழு நடைபெற்ற போதே கோயம்பேடு முதல் பூந்தமல்லி வரை மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை முதலே அந்த வழியில் செல்லும் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் நிலையில், சென்னை போக்குவரத்து போலீசார் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

போக்குவரத்து
அதாவது கோயம்பேடு முதல் பூந்தமல்லி வரையிலான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அதற்கு ஏற்றார் போல தங்கள் பயணத்திட்டத்தை அமைத்துக் கொள்ளுமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். காலை 06.00 மணி முதல் மாலை 04.00 மணி வரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக் கூடும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

கோயம்பேடு முதல் பூந்தமல்லி வரை
இது தொடர்பாக சென்னை பெருநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை, வானகரம் அருகில் நடைபெறும் நிகழ்ச்சியையொட்டி கோயம்பேடு முதல் பூந்தமல்லி வரையிலான சாலையில் அதிக வாகனங்கள் செல்லக்கூடும் என்பதால் போக்குவரத்து மெதுவாகச் செல்லவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

பயணத் திட்டம்
ஆகவே, வாகன ஓட்டிகள், பூந்தமல்லி முதல் கோயம்பேடு வரையிலான சாலையில் காலை 06.00 மணி முதல் மாலை 04.00 மணி வரையில், போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ளாத வண்ணம், தங்களது பயணங்களை முன்னேற்பாடாக மாற்றி அமைத்துக் கொள்ளவும், மாற்றுப் பாதையில் செல்லவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications