Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரத்தனவேல் ட்ரெண்டிங்.. மாரி செல்வராஜ் மீது "வன்மம்" கொட்டினாலும்.. மாமன்னனுக்கு லாபம்தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திரையரங்குகளில் மெகா ஹிட்டான மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் திரைப்படம், தற்போது நெட் பிளிக்சில் வெளியாகி அதிலும் உலகளவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்து இருக்கும் நிலையில், வில்லன் ரத்னவேலாக நடித்து வரும் பகத் பாசிலில் காட்சிகளை வெட்டி ஒட்டி மாரி செல்வராஜ் மீது வன்மம் கக்கி வருகிறார்கள் சாதி வெறியர்கள்.

உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மாமன்னன். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியை இப்படம் பெற்று இருக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக தமிழ்நாட்டிலும், அரசியல் களத்திலும் நிகழ்த்தப்பட்டு வரும் அடக்குமுறைகளை இப்படம் தோலுரித்துக் காட்டி இருக்கிறது.

 Due to hatred towards Mari Selvaraj Maamannan Villian Fahad Fazil celebrated by cateist

இந்த திரைப்படத்தை காண அனைத்து திரையரங்குகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. மாமன்னனாக நடித்த வடிவேலுவின் கதாபாத்திரம் அதிமுகவை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் தனபாலின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றாலும் பட்டியலின மக்கள் சாதி ரீதியாக எப்படி ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை இயக்குநர் மாரி செல்வராஜ் இப்படத்தில் அழகாக காட்சிபடுத்தி இருப்பார்.

அதேபோல் சமூக நீதி பேசும் கட்சிகளுக்குள் சாதி வெறியர்கள் புகுந்து எப்படியெல்லாம் அடக்குமுறைகளை நிகழ்த்துகிறார்கள் என்பதை பகத் பாசில் நடித்த ரத்னவேல் கதாபாத்திரத்தின் மூலமாக இயக்குநர் மாரி செல்வராஜ் காட்சிபடுத்தி இருப்பார். அந்த படத்தை முழுமையாக பார்த்தவர்கள் நிச்சயம் பகத் பாசிலை போன்ற ஒரு மனிதனை வாழ்க்கையில் சந்திக்கவே கூடாது என்றே நினைப்பார்கள்.

அந்த அளவுக்கு சாதி வெறி தலைக்கேறிய ஒரு அரசியல்வாதியாகவும், மனித நேயம் துளி கூட இல்லாத வெறிப்பிடித்த மனிதனாகவும் காட்டி இருப்பார் மாரி செல்வராஜ். நாய் பந்தயத்தில் தோல்வியடையும் நாயை அவர் கொலை செய்யும் காட்சி என படம் முழுக்க வில்லத்தனத்தை தனது அரக்கத்தனமான நடிப்பால் பகத் பாசில் காட்டி இருக்கிறார்.

ரத்தினவேலாகவே மாமன்னன் படத்தில் வாழ்ந்திருக்கும் பகத் பாசிலின் நடிப்பை பலரும் திரைப்படம் வெளியானதில் இருந்தே பாராட்டி வருகிறார்கள். அதேபோல் அரசியல் கட்சிகளுக்குள் சாதி எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது என்பதையும், நாற்காலியில் அமர வைப்பதில் இருக்கும் அரசியல் என்ன? மகன் உதயநிதியை அமர சொல்லும் பகத் பாசில், அவரது தந்தை வடிவேலுவை அமர சொல்ல மறுப்பது ஏன்? சாதி என்றவுடன் ஊர் முழுவதும் ஒன்று சேர்ந்துவிடுவது என சாதிய உளவியலை பட்டவர்த்தப்படுத்தி இருக்கிறார் மாரி செல்வராஜ்.

 Due to hatred towards Mari Selvaraj Maamannan Villian Fahad Fazil celebrated by cateist

காலம் முழுவதும் தன் முன் நின்றுகொண்டே இருந்த வடிவேலு, தன் முன்பே அமர்ந்து பேசுவதை ஏற்க முடியாத வில்லன் ரத்தினவேலுவின் சாதிய திமிரை அவ்வளவு அழகாகவும் ஆழமாகவும் மாரி செல்வராஜ் தவிர்த்து பிறரால் காட்சிப்படுத்தி இருக்க முடியுமா என்பது சந்தேகம். இப்படி படம் முழுவதும் ஒடுக்கப்படுபவர்களுக்கும், ஒடுக்குபவர்களுக்கும் இடையிலான உரையாடலை இயக்குநர் நிகழ்த்திக்கொண்டே இருப்பார்.

பெரிதாக சாதி, அரசியல் புரிதலற்ற மக்கள் கூட திரைப்படம் பார்த்துவிட்டு வந்தபோது, சாதி மிகவும் தவறு என்றும் அதை ஒழிக்க வேண்டும் எனவும் பேசியதை பார்க்க முடிந்தது. நிலைமை இப்படி இருக்க தற்போது திரைப்படம் நெட்பிளிக்சில் வெளியான பின்னர் பகத் பாசில் வரும் காட்சிகளை வெட்டி ஒட்டி சின்ன கவுண்டர், தேவர் மகன், எஜமான் போன்ற படங்களில் வரும் ஆண்ட சாதி பெருமை பேசும் பாடல்களை பேக்ரவுண்டில் ஓட விட்டு வில்லனை ஹீரோபோல் எடிட் செய்து சிலர் பரப்பி வருகிறார்கள்.

உடனே இதை வைத்து மாரி செல்வராஜின் முயற்சி அவருக்கு எதிராகவே திரும்பி விட்டதாக அவர் மீது வன்மம் கக்கி வருகிறார்கள். தேவர் மகன் தொடர்பாக மாரி செல்வராஜ் கமல் முன் தெரிவித்த கருத்துக்களை சுட்டிக்காட்டி, மாமன்னனும் தவறான முன்னுதாரணமாகிவிட்டது என்றெல்லாம் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மாமன்னன் திரைப்படத்தை முழுமையாக உள்வாங்கி பார்த்த யாருக்குமே ரத்னவேல் ஹீரோவாக தெரிந்திருக்க மாட்டான்.

முழுக்க முழுக்க சாதி வெறியர்கள் மீது பொதுமக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தும் வகையில்தான் அவரது கதாபாத்திரமும் அவரது காட்சியமைப்பும் வடிவமைக்கப்பட்டு இருக்கும். அந்த படத்தில் பகத் பாசிலின் மனைவியாக நடித்திருப்பவர் கூட, கணவனை கேவலமாகவே பார்ப்பார். இன்னும் சொல்லப்போனால் இவர்கள் தூக்கிப்பிடிக்கும் சாதிக்கே ரத்தினவேலு எதிராக இருக்கிறார்.

தனது சொந்த அரசியல் விருப்பு வெறுப்புக்காக சாதி சங்க தலைவரையே நாயை அடித்து கொன்றதைபோல் கொடூரமாக கொலை செய்துவிட்டு, அதை வடிவேலுவுக்கு எதிராக திசைதிருப்பி நாடகமாடி சாதி மக்களை ஏமாற்றி துரோகம் செய்கிறார். இதை பற்றியெல்லாம் சிந்திக்காமல் எப்படிதான் இந்த அருவருப்பான கதாபாத்திரம் கொண்டவரை ஹீரோபோல் நினைத்து வீடியோக்களை வெளியிடுகிறார்கள் என்று தெரியவில்லை.

ஒன்று இவர்கள் படத்தை முழுமையாக பார்க்காமல் மாரி செல்வராஜ் மீது கொண்ட வன்மத்தின் காரணமாக அவர் மீது வெறுப்பை கக்கி இருக்க வேண்டும். அல்லது மாமன்னன்போன்ற படத்தை பார்த்தும் சாதி வெறி நோய் குணமடையாத வெறியர்களாக அவர்கள் இருக்க வேண்டும். இவர்களை போன்றவர்கள் இருப்பதை நினைத்தால்தான் வேதனை வருகிறது.

எது எப்படி இருந்தாலும் இவர்களின் இந்த செயலும் மாரி செல்வராஜுக்கும், மாமன்னன் படத்திற்கும் நல்லதாகவே அமைந்து உள்ளது. காரணம் சமூக வலைதளங்களில் இப்படத்தை பற்றி பேசி தொடர்ந்து டிரெண்டிங்கில் வைத்திருப்பதால், பார்க்காதவர்களும் அதை பார்க்க நினைக்கிறார்கள்.

நெட்பிளிக்சில் பார்வையாளர்கள் எண்ணிக்கை உச்சம் தொட்டு உலகளவில் முதலிடத்தை பிடித்து இருக்கிறது. போகிறபோக்கை பார்த்தால் மீண்டும் திரையரங்குகளில் மாமன்னன் படத்துக்கு கூடுதல் ஸ்க்ரீன் ஒதுக்கி வசூல் சாதனை படைக்க வைத்துவிடுவார்களோ என்று எண்ண தோன்றுகிறது. அதேபோல் மாரி செல்வராஜின் மார்க்கெட்டும் இவர்களின் டிரெண்டிங்கால் மேலும் எகிறி இருக்கிறது என்பது மட்டும் உண்மை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+