போன மாதம் ரூ.700.. இந்த மாதம் ரூ.2000.. மின் கட்டணத்தை பார்த்த அதிர்ந்த தமிழக மக்கள்
சென்னை: கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்க ஏசி பயன்படுத்துவது, குளிர்சாதன பெட்டிகளை அதிகம் பயன்படுத்துவது, மின் விசிறிகளை அதிகம் பயன்படுத்துவது, மிக்சியை ஜூஸ் போட அதிகம் பயன்படுத்துவது, துணிகளை அடிக்கடி துவைக்க வாஷிங் மெஷின் பயன்படுத்தவது போன்ற காரணங்களால் மின் கட்டணம் இரண்டு மடங்காக எகிறி உள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒருமாத காலமாகவே கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தை சந்தித்து வருகிறது. தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தற்போதைய நிலைலேயே தினமும் 100 டிகிரி செல்சியஸ் அளவுக்கு மேலாக வெப்பம் பல இடங்களில் இருக்கிறது. சென்னையில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே வருவதை பொதுமக்கள் தவிர்த்து வருகிறார்கள்.
ஈரோடு, சேலம், திருப்பத்தூர், வேலூர், கோவை , மதுரை, திருநெல்வேலி போன்ற பகுதிகளில் வெயிலின் தாக்கம் மிக கடுமையாக உள்ளது. மக்கள் வெயில் கொடுமையை சமாளிக்க முடியாமல், உடலுக்கு குளிர்ச்சியை தரும் பழச்சாறுகளை அதிகம் அருந்துகிறார்கள். குளிர்பானங்களை வீட்டில் வாங்கி வைத்து பருகி வருகின்றனர். இயற்கையாக கிடைக்கும் இளநீர், நுங்கு விற்பனை, தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்றவற்றின் விற்பனை களைகட்டியுள்ளது.
வெப்பம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் வியர்வையில் நனைவதால் அடிக்கடி குளிக்கிறார்கள். இதேபோல் வாஷிங் மெஷினை அடிக்கடி துணி துவைக்க பயன்படுத்துகிறார்கள். இதனால் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக அடிக்கடி மோட்டார் போட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதேபோல் வீடுகளில் மின்விசிறி இல்லாமல் சில நிமிடங்கள் கூட இருக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இரவிலும் வெப்பத்தின் தாக்கம் இருப்பதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் மக்கள் நொந்து போகும் நிலை இருக்கிறது.
இதனால் கோடைகாலத்தில் வீடுகளில் மின்சார பயன்பாடு வழக்கத்தைவிட கடுமையாக அதிகரித்துள்ளது. வீடுகளில் ஏசி ஓய்வின்றி ஓடுவது, இதேபோல் மின்விசிறிகள் ஓய்வின்றி சுழன்று கொண்டே இருப்பது. பழச்சாறுகள் தயாரிக்க மிக்சி பயன்பாடும் அதிகரித்தது, அதுபோல், குளிர்பதன பெட்டி (பிரிட்ஜ்) வைத்துள்ள வீடுகளில் அதன் பயன்பாடும் அதிகரித்துள்ளது. வாஷிங் மெஷின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. இந்த காரணங்களால் மின்பயன்பாடு கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்த மாதம் மின் கட்டணம் பலருக்கு இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் கணக்கீடு செய்யும் நிலையில், கடந்த முறை இருந்ததை விட, தற்போது நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மின்சார கட்டணம் வந்துள்ளது. கடந்த முறை ரூ.200 மின்கட்டணம் செலுத்திய வீடுகளில் ரூ500 வரையும், சுமார் ரூ.700 மின் கட்டணம் செலுத்திய பல வீடுகளில் தற்போது ரூ.1,800 மற்றும் 2000 ரூபாய் வரை கட்டணம் வந்துள்ளது.
ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2,500 கட்டணம் செலுத்திய வீடுகளுக்கு ரூ.4 ஆயிரம் முதல் 5000 வரை மின்கட்டணம் வந்துள்ளது. ஒரு புறம் கோடை வெயில் கடுமையாக உள்ள நிலையில், மின்கட்டணமும் அதிகரிப்பதால் மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள்.. இந்த மாதம் பலரும் பள்ளிக்கட்டணம் கட்ட வேண்டிய நிலை இருப்பதால் கவலையில் இருக்கிறார்கள்.
மே மாதம் வெயில் அதிகரிக்கும் என்பதால், மின் கட்டணமும் இன்னமும் உயரும் வாய்ப்பு உள்ளது.இது ஒருபுறம் எனில், வெயிலை சமாளிக்க முடியாமல் பலரும் சுற்றுலா தலங்களுக்கு செல்கிறார்கள். இதன் காரணமாகவும் அவர்களின் பட்ஜெட் கடுமையாக அதிகரித்துள்ளது. எப்போது மழை வரும் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications