"துரை வைகோ - மல்லை சத்யா இருவரும் கட்டித் தழுவி ஒற்றுமையாக இருப்போம் என உறுதி கொடுத்துள்ளனர்”.. வைகோ
சென்னை: "துரை வைகோவும் மல்லை சத்யாவும் மனம் விட்டு பேசினார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி கைகுலுக்கிக்கொண்டு, இனி இருவரும் இணைந்து ஒற்றுமையாகப் பணியாற்றுவோம் என்ற சமிக்ஞையை நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு தெரிவித்தனர்" என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக எம்.பியும், வைகோவின் மகனுமான துரை வைகோ நேற்று அறிவித்தார். மதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக உள்ள மல்லை சத்யாவுக்கும், துரை வைகோவிற்கும் இருக்கும் மன கசப்புதான் இந்த விலகலுக்கு காரணம் என கூறப்பட்டது. மதிமுகவில் ஏற்பட்ட இந்த குழப்பம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

மதிமுக கூட்டம் இன்று
இந்நிலையில் இன்று சென்னை எழும்பூரில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக கழகத்தின் தலைமை அலுவலகமான தாயகத்தில் அக்கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ, துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, முக்கிய பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தலையடுத்து தன்னுடைய ராஜினாமாவை துரை வைகோ திரும்பப் பெற்றுள்ளார். மல்லை சத்யா, துரை வைகோ இருவரும் இதுவரை இருந்த மனக்கசப்புகளை மறந்துவிட்டு இணைந்து பணியாற்ற பொதுச் செயலாளர் வைகோ அறிவுறுத்தியதன் பேரில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
வைகோ செய்தியாளர் சந்திப்பு
மதிமுக நிர்வாக குழு கூட்டம் தொடர்பாக வைகோ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய வைகோ, "மதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் திடீரென்று தலையெடுத்து அது தொடர்பாக பதிவுகளிலே பலரும் தங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு எழுதினர்.
பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் அவரவர்கள் கற்பனைக்கு ஏற்ப செய்திகளாகவும் வெளியிட்டனர். இன்று காலை பத்திரிகைகளை பார்த்தாலே உண்மைக்கு புறம்பாகத்தான் செய்திகளை தந்திருக்கிறார்கள்.
இருவருமே நாகரீகமாக
இப்படியான சூழலில் இன்று நடந்த நிர்வாகக் குழு கூட்டத்தில் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவும் முதன்மை செயலாளர் துரை வைகோவும் மனம் விட்டு பேசினார்கள். உள்ளம் திறந்து பேசினார்கள். தங்கள் உணர்ச்சிகள் ஆவேசத்தின் வடியலாக வந்த சில வார்த்தைகள் எல்லாவற்றையும் மிக நாகரீகமாக இருவருமே கையாண்டார்கள்.
இதில் மல்லை சத்யா இனிமேல் இப்படிப்பட்ட பதிவுகள் வராது. அப்படிப்பட்ட சூழ்நிலையை ஏற்படாது. அதற்கு நான் ஒருபோதும் இடம் கொடுப்பதில்லை என்று உறுதிமொழி கொடுத்தார்.
துரை வைகோ வாபஸ்
ஆகவே, இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று துரை வைகோவிடம் கூறினார். நான் இயக்கத்திற்கும் மறுமலர்ச்சி திமுகவுக்கும் தலைமைக்கும் முதன்மை செயலாளருக்கும் பக்க பலமாக உறுதுணையாக இனி உறுதியாக செயல்படுவேன் என்றும் சத்யா சொன்னார். சத்யா கூறியதை ஏற்றுக் கொண்டு நான் எடுத்த முடிவை திரும்ப பெற்றுக் கொள்கிறேன் என்று முதன்மைச் செயலாளர் துரை வைகோ கூறினார்.
கட்டித் தழுவி, கைகுலுக்கி
அதை ஏற்றுக் கொண்டு ஒற்றுமையாக இருந்து இந்த இயக்கத்தை வலுப்படுத்துவோம் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் நடந்தவை நடந்து முடிந்தவையாக இருக்கட்டும்.இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும் என்று கூறியதோடு இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி தழுவிக் கொண்டு கரம் குலுக்கி நாங்கள் இணைந்து பணியாற்றுவோம் என்ற சமிக்ஞையை இங்கு வந்திருக்கிற நிர்வாக குழு உறுப்பினர்களுக்கு தெரிவித்தனர்.
பலத்த கர ஒலிக்கு மத்தியில் எனது வலது பக்கத்தில் துரை வைகோவும் இடது பக்கத்தில் மல்லை சத்யாவும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications