ஜூலை 3-ஆம் தேதி நாமக்கல்லில் ''நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு'' -துரைமுருகன் அறிவிப்பு
சென்னை: ஜூலை 3-ஆம் தேதி நாமக்கல்லில் ''நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு'' நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் இந்த மாநாட்டில், திமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற பிரதிநிதிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக துரைமுருகன் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது;

காலை முதல் மாலை
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பொறுப்பேற்றுள்ள நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு, கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை - அமைச்சருமான கே.என்.நேரு முன்னிலையில், கழகத் தலைவரும் - - தமிழ்நாடு முதலமைச்சருமான தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் 3.7.2022 அன்று (ஞாயிறு), காலை 9:30 மணி முதல் மாலை 5.00 மணிவரை பொம்மகுட்டை, நாமக்கல்லில் நடைபெறும்.

தவறாது வாருங்கள்
இந்த மாநாட்டில், பல்வேறு தலைப்புகளின்கீழ் பேச்சாளர்கள் சிறப்புரை ஆற்றவுள்ளார்கள். கழகத்தின் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி மேயர், துணை மேயர் - நகராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள் - பேரூராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள் - நகர்ப்புற உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் என அனைவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் இணைக்கப்பட்டுள்ள அனுமதி பேட்ஜ் பெற்று, இம்மாநாட்டில் தவறாது கலந்துகொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்பாடுகள் தீவிரம்
இதனிடையே நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டிற்கான முன்னேற்பாடு பணிகளை நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராஜேஷ்குமார் கடந்த 15 நாட்களாக செய்து வருகிறார். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவும் அவ்வப்போது திருச்சியிலிருந்து சேலம் செல்லும் வழியில் மாநாடு நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.

சென்னையில் பயிற்சி
அண்மையில் தான் சென்னையில் வைத்து அரசு சார்பில் மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி தலைவர்கள், பேரூராட்சி தலைவர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து இப்போது இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு ஏற்கனவே திருச்சியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications