ஆயாவா! ஔவையாரா? யாரை சொல்றீங்க? துரைமுருகன் பேச்சால் சட்டசபையில் சிரிப்பலை! குறுக்கே வந்த தங்கம்
சென்னை: தமிழக சட்டசபையில் ஔவையார் குறித்த விவாதத்தில் ஆயாவா என அமைச்சர் துரைமுருகன் தனக்கே உரிய பாணியில் கேட்டது அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய கேள்வி நேர விவாதத்தின்போது ஔவையார் குறித்த காரசார விவாதம் இடம்பெற்றது.

வேதாரண்யம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ் மணியன் பேசுகையில், துளசியாபட்டினத்தில் ஔவையாருக்கு 13 கோடி ரூபாயில் மணிமண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில், அவ்வையார் அறிவு களஞ்சியம் துவக்க அரசு முன்வர வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
அதற்குப் பதிலளித்த தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், எதிர்காலத்தில் நிதிநிலைக்கு ஏற்ப முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று அரசு பரிசீலனை செய்யும் என்றார்.
இதைத்தொடர்ந்து ஓ.எஸ்.மணியன், நிதிப் பற்றாக்குறை என்ற பிரச்சனை ஒன்றுமில்லை. ஏற்கனவே 13 கோடி ரூபாயில் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. அதில் புத்தகத்தை வைத்தால் மட்டும் போதும் என்றார்.
அப்போது பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஔவையார் ஒருவர் அல்ல ஐந்து பேர் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதில் எந்த ஔவையாரை உறுப்பினர் குறிப்பிடுகிறார் எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த ஓ.எஸ்.மணியன், ஒரு காலத்தில் பெண் புலவர்களை ஔவையார் என்று அழைத்தனர். வேதாரண்யம் தொகுதி துளசியாபட்டினத்தில் ஔவையாருக்கு 13 கோடி ரூபாயில் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது, அந்த ஔவையாருக்குத் தான் அறிவு களஞ்சியம் வேண்டுமெனக் கேட்கிறேன் எனத் தெரிவித்தார்.
அதற்கு துரைமுருகன், நம் வீட்டில் வயதானவர்களை ஆயா என அழைப்பதை போன்று ஔவையார் என அழைத்தனரா என துரைமுருகன் மீண்டும் கேள்வி எழுப்ப, அவையில் சிரிப்பலை எழுந்தது.
இதைத்தொடர்ந்து, பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, இதுவரை ஔவையார் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தோம். இப்போதுதான் ஔவை யார்? என்ற ஒரு கேள்வி விவாதமாக மாறியிருக்கிறது. ஔவையார் என்பதை ஒரு குறியீடாகக் கூட எடுத்துக் கொள்ளலாம்.
முன்காலத்திலிருந்தே ஔவையார் என்பது பெண் இனத்திற்கும், மகளிருக்கும் ஒரு குறியீடாகவும், ஆண்ட சொல்லாகவும் இருக்கிறது. இது குறித்து முதலமைச்சர் கவனத்திற்குக் கொண்டு செல்வோம்.
ஏற்கனவே விடுதலை போராட்ட வீரர்கள், தமிழ் அறிஞர்கள், தலைவர்கள் நினைவு மண்டபங்கள், எல்லாம் வெறும் நினைவு மண்டபங்கள் கட்டடங்கள் மட்டும் இல்லாமல் வருகின்ற மக்களும் பயன் பெறுகின்ற வகையில், அந்த இடம் ஒரு படிப்பகமாக நூலகமாக உருவாக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே அங்கு அறிவுக்களஞ்சியம் அமைக்கப்பட வேண்டும் என்பதை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்வோம் என உறுதியளித்தார்.












Click it and Unblock the Notifications