பொதுச்செயலர் பதவி- திமுகவில் கலகத்தை உருவாக்க முயற்சிக்கிறேனா? துரைமுருகன் மறுப்பு
சென்னை: பொதுச்செயலாளர் பதவி கிடைக்காததால் தாம் கட்சியில் கலகத்தை உருவாக்க முயற்சிப்பதாக வெளியான செய்திகளுக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக பொதுச்செயலாளராக இருந்த க. அன்பழகன் காலமானார். அந்த பதவியில் துரைமுருகன் நியமிக்கப்பட இருந்தார். இதற்கான தேர்வு நடைபெறும் முன்னரே கொரோனா லாக்டவுன் அமலுக்கு வந்தது.
இதனால் துரைமுருகன் திமுகவின் பொதுச்செயலாளராக முடியாத சூழ்நிலை உருவானது. இதனையடுத்து திமுகவின் பொருளாளராகவே துரைமுருகன் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. தமக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைக்காததால் துரைமுருகன் அதிருப்தியில் இருக்கிறார் என்பது நீண்டகாலமாக சொல்லப்படும் செய்தி.

பாஜகவுக்கு போன செல்வம்
இந்த நிலையில் திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம், பாஜகவுக்கு தாவினார். திமுகவின் சிட்டிங் எம்.எல்.ஏ. பாஜகவுக்கு தாவியது மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இதனால் செல்வத்தைத் தொடர்ந்து பலரும் பாஜக பக்கம் தாவுவார்கள் என யூகங்கள் வெளியாகின. அதில்தான், துரைமுருகன் கட்சியில் கலகத்தை ஏற்படுத்துகிறார் என்கிற ஒன்றும்.

வன்மையான கண்டனம்
இதற்கு மறுப்பு தெரிவித்து துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், ‘ஏதோ எனக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைக்கவில்லை' என்ற ஏக்கத்தில் கழகத்துக்குள் கலக்கத்தை உருவாக்க நான் முனைவதுபோல், ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. இச்செய்தியை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

திராவிட நாடு போராளி
எம்.எல்.ஏ., - எம்.பி., - அமைச்சர் பதவிகள் கிடைக்கும் என்று இந்த இயக்கத்திற்கு வந்தவன் அல்ல துரைமுருகன். அண்ணாவின் திராவிட நாடு கொள்கைப் பார்த்து ஒரு போராளியாக 1953ஆம் ஆண்டு இந்த இயக்கத்திற்கு வந்தவன். நான் இதுவரை பெற்ற பதவிகள் எனக்கு கிடைக்காமல் போய் இருந்தாலும், கட்சியின் அடிமட்ட தொண்டனாக இருந்து, இருவண்ண கொடியை பிடித்துக் கொண்டு கழகத்திற்காக கோஷமிட்டே இருப்பவன்.

நான் ஒரு லட்சியவாதி
ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டவன் நான். ஒரு லட்சியவாதியின் வரலாறு பற்றி தெரிந்திருக்க நியாயமில்லை. சுமார் 60 ஆண்டுகளாக என்னை நன்கு அறிந்தவர்கள் எங்கள் இயக்கத் தோழர்கள். அவர்களிடம் தில்லுமுல்லு பிரச்சாரம் எடுபடாது.
இவ்வாறு துரைமுருகன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications