மத்திய அரசை எதிர்க்க தமிழக அரசுக்கு தில் இல்லை... துரைமுருகன் பொளேர்
சென்னை: குடியுரிமைச் சட்டம் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசுக்கு தில் இல்லை என எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டம் தொடர்பாக நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி எழுப்பிய கேள்விக்கு, அந்த விவகாரம் ஆய்வில் இருப்பதாக சபாநாயகர் கூறினார்.
இதனிடையே குடியுரிமைச்சட்டத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வராததால் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் காலை 11.30 மணியளவில் வெளிநடப்பு செய்துவிட்டனர்.
வன்முறைகள் நிறுத்தப்பட்டால்தான் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான வழக்கில் விசாரணை- உச்சநீதிமன்றம்
தீர்மானம்
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் போல் தமிழக சட்டமன்றத்திலும் எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பது திமுகவின் கோரிக்கை. ஆனால் அது நிறைவேற்றப்படாததால் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தைரியம் இல்லை
குடியுரிமைச் சட்டம் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசுக்கு தில் இல்லை எனக் கூறிய துரைமுருகன், திமுக சட்டமன்ற உறுப்பினர்களோடு சட்டப்பேரவை நிகழ்வுகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார்.
ஆய்வில் உள்ளது
இந்நிலையில் குடியுரிமைச் சட்ட விவகாரத்தில் எதிர்ப்பு தீர்மானம் தொடர்பாக நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரியும் கேள்வி கேட்டார். அப்போது, ஆய்வில் உள்ளதாக சபாநாயகர் பதிலளித்தார். இதனிடையே சபாநாயகர் சிரித்துக்கொண்டே ஆய்வில் இருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது என தமிமுன் அன்சாரி கூறினார்.
விமர்சனம்
சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், மத்திய அரசுக்கு எதிராக ஒரு தீர்மானம் நிறைவேற்றக் கூட அதிமுக அரசு அஞ்சி நடுங்குவதாகவும், தீர்மானம் நிறைவேற்றப்படாததை கண்டித்து வெளிநடப்பு செய்ததாகவும் விளக்கம் அளித்தார்.