அடேங்கப்பா! "11 கிலோ தங்கம், கிரிப்டோ கரன்சி முதலீடு.." எஸ்பி வேலுமணி வீட்டில் கைப்பற்றப்பட்டது என்ன
சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குத் தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் 11.1 கிலோ தங்க நகைகள், 118 கிலோ வெள்ளி நகைகள், கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் மிகவும் பவர்புல் அமைச்சர்களில் ஒருவராக இருந்தவர் எஸ்பி வேலுமணி. இவர் மீது ஏற்கனவே டெண்டர் முறைகேடு உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எஸ் பி வேலுமணி
இது தொடர்பாகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். இதனிடையே வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக மேலும் ஒரு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ளது. அதாவது எஸ்.பி.வேலுமணி அமைச்சராகஇருந்த சமயத்தில், அவர் வருமானத்திற்கு அதிகமாக 58 கோடி ரூபாய் அதாவது 3928 % அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

2ஆவது முறையாக சோதனை
அதன் அடிப்படையில் 2ஆவது முறையாக இன்றும் எஸ்.பி.வேலுமணிக்குத் தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இதில் 11.1 கிலோ தங்க நகைகள், 118 கிலோ வெள்ளி நகைகள், கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது. மேலும், ரூ.34,00,000/- அளவுக்கு பலதரப்பட்ட கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.

லஞ்ச ஒழிப்பு துறையினர்
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "S.P.வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி என்பவர் தான் முன்பு தமிழக அரசின் உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த போது 26.04.2016 முதல் 15.03.2021 வரையிலான காலத்தில் 12 நபர்களின் துணையுடன், கூட்டுச் சதி புரிந்து வருமானத்திற்கு அதிகமாக ரூ 58,23,97,052 அளவுக்குச் சொத்து சேர்த்ததாகக் கிடைத்த நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையில் குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

11 கிலோ தங்கம்
இதன் தொடர்ச்சியாக இவ்வழக்கு தொடர்பான ஆவணங்கள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் 59 இடங்களில் (கோயம்புத்தூர்-42, திருப்பூர் -2, சேலம்-4, நாமக்கல் - 1, கிருஷ்ணகிரி -1, திருப்பத்தூர்-1, சென்னை - 7 மற்றும் கேரள மாநிலம் ஆனைகட்டி-1) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினரால் இன்று (15.3.2022) சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்படி சோதனையில் தங்க நகைகள் 11.153 கிலோ கிராம், வெள்ளி சுமார் 118.506 கிலோ கிராம் மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு
கணக்கில் வராத பணம் ரூ.84,00,000/-, சான்று பொருட்களான கைப்பேசிகள், பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், மடி கணினி, கணினி ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வழக்கிற்குத் தொடர்புடைய ஆவணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டன. மேலும் சுமார் ரூ.34,00,000/- அளவுக்கு பலதரப்பட்ட கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications