Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தளி:சிபிஐ வேட்பாளர் ராமச்சந்திரன்- அதிர வைக்கும் முகம்- திராவிடர் விடுதலை கழகம் தேர்தல் புறக்கணிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தளி சட்டசபை தொகுதியில் கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ராமச்சந்திரன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து அத்தொகுதியில் மட்டும் தேர்தலை புறக்கணிப்பதாக கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் விடுதலை கழகம் முடிவெடுத்துள்ளது.

திராவிடர் விடுதலை கழகம் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை: 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தளி சட்டமன்ற தொகுதியில் திராவிடர் விடுதலைக் கழகம் தேர்தல் புறக்கணிப்பு என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்தத் தொகுதியில் பாஜகவை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பா.ஜ.க. ஆட்களுக்கு சற்றும் குறையாத கிரிமினலான தி.இராமச்சந்திரனை அறிவித்துள்ளமை அதிர்ச்சியடைய வைக்கிறது.

2012ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி பெரியார் திராவிடர் கழகமாக செயல்பட்டபோது அப்போதைய கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பாளர் தோழர் பழனி எனும் பழனிச்சாமி, தளி இராமச்சந்திரனின் மக்கள் விரோத செயல்பாடுகளை எதிர்த்துப் போராடியதால் துப்பாக்கியால் சுட்டும் தலையைத் துண்டித்தும் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தி.இராமச்சந்திரன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு தற்போது நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது.

ஆள் மாறாட்டம்

ஆள் மாறாட்டம்

100 கோடி ரூபாய் கிரானைட் கொள்ளை வழக்கும் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. 1996இல் நாகமங்கலத்தைச் சார்ந்த என்.சி.ராமன் கொலை செய்யப்பட்டார். இதில் தளி இராமச்சந்திரனும் குற்றம் சாட்டப்பட்டார். கொலையை நேரில் பார்த்த என் சி.ராமன் தம்பி சந்திரசேகர், பல்வேறு அச்சுறுத்தல்களையும் மீறி சாட்சி கூறியதால் அவரும் ஒசூர் பேருந்து நிலையத்தில் மக்கள் முன் வெட்டி கொல்லப்பட்டார். அப்போது தி.இராமச்சந்திரன் தனது பெயருள்ள வேறு ஒரு இராமச்சந்திரனை ஆள்மாறாட்டம் செய்து சரணடைய வைத்து தப்பித்துக் கொண்டார்.

நில அபகரிப்பு

நில அபகரிப்பு

இந்த ஆள்மாறாட்டம், தோழர் பழனி கொலைக்குப் பிறகு மீள் விசாரணை செய்ததில் தளி இராமச்சந்திரனையும் அதற்கு உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிகளும் குற்றவாளியாக்கப்பட்டு, குற்றப்பத்திரிக்கை மாற்றப்பட்டு இப்போது வழக்கு விசாரணையில் உள்ளது. வேறு சில கொலை வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள இராமச்சந்திரன் ரியல் எஸ்டேட் தொழிலுக்காக இப்பகுதி விவசாயிகளை மிரட்டி நிலங்களைப் பறித்த குற்றச்சாட்டுக்கும் உள்ளானவர் ஆவார்.

உச்சநீதிமன்றம் கருத்து

உச்சநீதிமன்றம் கருத்து

ஓசூர் நீதிமன்ற விசாரணையில் தளி இராமச்சந்திரனும் அவரது ஆட்களும் குறுக்கீடு செய்து மிரட்டி விசாரணையை சீர்குலைப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு காரணமாக தோழர் பழனி படுகொலை வழக்கு விசாரணை சேலம் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. மக்களை அச்சத்தின் பிடியில் தளி இராமச்சந்திரனும், அவரது ஆட்களும் வைத்திருப்பதாக உச்ச நீதிமன்றமே கருத்து தெரிவித்திருந்தது. 2006ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட தளி இராமச்சந்திரன் சீட் கேட்டபோது தொகுதி உடன்பாட்டில் சி.பி.ஐ கட்சிக்கு அத்தொகுதி சென்றது. சி.பி.ஐயின் மாவட்ட செயலாளர் நாகராஜ் ரெட்டி சி.பி.ஐ சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டு பணபலத்தால் வெற்றி பெற்றார் தளி இராமச்சந்திரன்.

விந்தையிலும் விந்தை

விந்தையிலும் விந்தை

தோழமை கட்சி வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவரை கட்சியிலிருந்து நீக்கியது. ஆனால் சி.பி.அய் கட்சி தன் சொந்த கட்சி வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு தோற்கடித்தவரையே தன் கட்சியில் சேர்த்துக் கொண்டது. இதன் காரணமாக சி.பி.அய்.யின் மாவட்டச் செயலாளரும், தளி ராமச்சந்திரனால் தோற்கடிக்கப்பட்ட தோழர் நாகராஜ் ரெட்டி சி.பி.அய். கட்சியை விட்டு பல நூறு கட்சித் தோழர்களுடன் வெளியேறினார். ஆனாலும் 2 முறை தளி,ராமசந்திரனின் கொலை வெறித்தாக்குதலுக்கு ஆளானர் தோழர் நாகராஜ் ரெட்டி. அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் அவர் நிரந்தர உடல் ஊனமுற்ற நிலையில் தலை தொங்கியவாறு கொடும் வேதனை அனுபவித்து வாழ்ந்து வருகிறார்.

தேர்தல் புறக்கணிப்பு

தேர்தல் புறக்கணிப்பு

இந்நிலையிலும் தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்காக நீதி கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார். சி.பி.அய் கட்சியின் மாவட்டச் செயலாளருக்கே இந்த கொடூரம் என்றால் சாதாரண மக்களின் நிலையை எண்ணிப்பார்க்க வேண்டும். தோழர் நல்லக்கண்ணு போன்ற நேர்மையான தலைவர்கள் இருக்கும் கட்சியில் தளி.இராமச்சந்திரன் கட்சியின் வேட்பாளரா ?என்ற வேதனையான கேள்வியையும் எழுப்ப வேண்டியிருக்கிறது. தியாகத் தழும்புகளும், எளிமையும் நிறைந்த தோழர்களைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி, பணபலம் என்ற ஒற்றைக் காரணத்துக்காக கிரிமினல் கொலை வழக்குகளில் சிக்கியுள்ள தளி இராமச்சந்திரனை பொதுவுடமை "புரட்சியாளராக்கி" களம் இறக்கியுள்ள நிலையிலும், அங்கே எதிர் வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சி உள்ள நிலையிலும் திராவிடர் விடுதலைக் கழகம் இந்தத் தொகுதியில் வேறு வழியற்ற நிலையில் தேர்தல் புறக்கணிப்பு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இவ்வாறு திராவிடர் விடுதலை கழகம் தெரிவித்துள்ளது. சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரிப்பதாக திராவிடர் விடுதலை கழகம் நிலைப்பாடு எடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+