தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்தது புதிய இ பாஸ் நடைமுறை.. விண்ணப்பித்த உடன் கிடைக்கும்!
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் புதிய இ பாஸ் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.. விண்ணப்பித்த அனைவருக்கும் இன்று (17ம் தேதி முதல்) இ பாஸ் வழங்கப்பட உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க கடந்த மார்ச் 23ம் தேதி மாலை தொடங்கி தமிழகத்தில் கடந்த 4 மாதங்களாக ஊரடங்கு அமலில் இருக்கிறது. இடையில் தொற்று குறைவாக இருந்ததால் ஜூன் மாதத்தின் ஆரம்பத்தில் இ பாஸ் முறையில் தளர்வு அறிவிக்கப்பட்டது. மண்டலம் விட்டு மண்டலம் சென்றால் மட்டும் இபாஸ் எடுத்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டது,
ஆனால் தொற்று பரவல் கடுமையாக அதிகரித்ததால் பொதுபோக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இ பாஸ் தளர்வு ரத்து செய்யப்பட்டது. இபாஸ் தருவதும் கடுமையாக்கப்பட்டது. இதனால் மக்கள் இ பாஸ் பெறுவது என்பது மிகவும் கடினமான செயலாக மாறியது, முறையாக விண்ணப்பித்தாலும் இ பாஸ் கிடைப்பதில்லை என்ற புகார் எழுந்தது.

முதல்வர் அறிவிப்பு
தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை எழுப்பியதை அடுத்து அரசு விண்ணப்பித்த அனைவருக்கும் இன்று முதல் இபாஸ் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதன் படி தமிழகத்தில் இன்று முதல் புதிய இ பாஸ் நடைமுறை அமலுக்கு வருகிறது இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

பொதுமக்கள் ஒத்துழைப்பு
அந்த அறிக்கையில் கூறியிருந்ததாவது: கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும், சிகிச்சைகளை அளித்தும், நிவாரணங் களை வழங்கியும் முனைப்புடன் அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. நோய்த் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களின் ஒத்துழைப்பையும், நோய்த் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு, ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது.

மாவட்டம் விட்டு மாவட்டம்
நோய்த் தொற்று பரவுவதை தடுக்க, திருமணம், அவசர மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம், பணி சம்பந்தமாக பயணித்தல், வெளியிடங்களுக்குச் சென்று சொந்த ஊர் திரும்புதல் ஆகிய காரணங்களுக்காக மட்டும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க விண்ணப்பிக்கப்படும் இ-பாஸ் விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் கண்காணிக்கப்பட்டு, நோய்த்தொற்று ஏற்பட்டால் அவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இ பாஸ் வாங்குவது எப்படி
இந்நிலையில், பொதுமக்கள் முக்கிய பணிகளுக்கு தடையின்றி தமிழ்நாடு முழுவதும் பயணிக்க (மாவட்டங்களுக்கு இடையே) 17-8-2020 (திங்கட்கிழமை முதல் ஆதார் அல்லது குடும்ப அட்டை விவரங்களுடன் தொலைபேசி அல்லது அலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால், இ-பாஸ் அனுமதி எவ்வித தாமதமும், தடையுமின்றி உடனுக்குடன், விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

ஒத்துழைப்பு கொடுங்கள்
பொதுமக்களின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை, அனைவரும் பொறுப்புடன் பயன்படுத்தி தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டும் இ-பாஸுக்கு விண்ணப்பம் செய்து, இ-பாஸ் பெற்று பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனினும், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வர தற்போதுள்ள இ-பாஸ் நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும். கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த அரசின் நிலையான வழிகாட்டி நடைமுறைகளை கடைபிடிக்கவும், அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் பொதுமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications