சென்னையில் நடுரோட்டில் தீக்குளித்த இளைஞர்.. ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டின் முன் நடந்த பயங்கரம்
சென்னை: மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.23 லட்சம் மோசடி செய்ததாக சென்னை சூளைமேட்டில் வசிக்கும் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டின் முன்பு தேனியிலிருந்து வந்த வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீயை பற்ற வைத்து, பொதுமக்கள் முன்னிலையில் அலறி துடித்து அவர் உயிரைவிட்டது பார்ப்பவர்களை நடுங்க செய்தது.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக ரியல் எஸ்டேட் அதிபர் பழனிகுமார் என்பவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ரியல் எஸ்டேட் தொழில்
சென்னை சூளைமேடு கில் நகர் 2வது தெருவில் வசிப்பவர் பழனிகுமார்.இவருக்கு 57 வயதாகிறது. சென்னை புறநகர் பகுதியான பனையூரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். ரியல் எஸ்டேட் அதிபரான பழனிகுமார் தேனி மாவட்டத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன்(30) என்ற பட்டதாரி இளைஞரிடம் மின்வாரியத்தில் அதிகாரிகள் பலரைத் தெரியும் என்றும் உனக்கு வேலை வாங்கி தருகிறேன் என பாலகிருஷ்ணனிடம் உறுதி அளித்தாராம்.

23 லட்சம் பணம்
இதை நம்பி பாலகிருஷ்ணன் பல இடங்களில் கடன் வாங்கி அந்த பணத்தை ரியல் எஸ்டேட் அதிபர் பழனிகுமாரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் சொன்ன படி வேலை வாங்கி தரவில்லையாம். இதனால் மனமுடைந்த பாலகிருஷ்ணன் வேலைக்காக கொடுத்த ரூ.23 லட்சம் பணத்தை திரும்பக் கேட்டு வந்தாராம். ஆனால் ரியல் எஸ்டேட் அதிகாரி பழனிகுமார் வாங்கிய பணத்தை கொடுக்காமல் இழுத்து அடித்து வந்தாராம். பின்னர் அதில் 10 லட்சத்திற்காக ஒரு செக் கொடுத்தாராம்.

சந்திக்க மறுப்பு
அதை வங்கியில் செலுத்தியபோது, பழனிகுமார் கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி விட்டதாம். இதனால் நேற்று முன்தினம் செக்கை எடுத்துக் கொண்டு தேனியில் இருந்து பாலகிருஷ்ணன், பழனிகுமாரை சந்தித்து பணத்தை வாங்க வந்திருக்கிறார். ஆனால் பழனிகுமார் பணம் கொடுத்த பாலகிருஷ்ணனை சந்திக்காமல் தவிர்த்து விட்டாராம்.

தீக்குளித்தார்
இதனிடையே நேற்று காலை பழனிகுமார் அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது பாலகிருஷ்ணன், பழனிகுமாரிடம் வேலைக்கு கொடுத்த பணத்தை கேட்டிருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த வாலிபர் திடீரென அவர் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி கண்ணிமைக்கும் நேரத்தில் தீ வைத்து கொளுத்தி கொண்டார்.

வாலிபர் தற்கொலை
இதை சற்றும் எதிர்பார்க்காத பொதுமக்கள் தீயால் வலி தங்க முடியாமல் அங்கும் இங்கும் அலறி துடித்த பாலகிருஷ்ணன்னை மீட்க முயன்றனர். ஆனால் தீயின் காரணமாக அவரை உடனே மீட்க முடியவில்லை. பிறகு கடும் போராட்டத்திற்கு பிறகு இளைஞர் மீது இருந்து தீயை பொதுமக்கள் அனைத்து சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை வழக்கு
93 விழுக்காடு தீக்காயங்களுடன் வாலிபர் உயிருக்கு போராடி அவர் சிறிது நேரத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து சூளைமேடு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் ரியல் எஸ்டேட் அதிபர் பழனிகுமார் மீது தற்கொலைக்கு தூண்டியதாக சூளைமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் மோசடி தொடர்பாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் விசாரித்த வருகிறார்கள். இந்த சம்பவம் சூளைமேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications