விலைவாசி.. தமிழகத்தில் மிகக் குறைவு.. வடக்கில் அதிகம்.. ‘காரணம் இதான்’! டேட்டாவை நீட்டிய ஜெயரஞ்சன்!
சென்னை : மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் உணவுப் பொருட்கள் விலை கட்டுக்குள் இருப்பதாக மாநில வளர்ச்சிக் கொள்கைக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இந்திய அளவில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் 7.6% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் விலையேற்றம் 3.1% தான் என ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.
விலைவாசி உயர்வு நாடு முழுவதும் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பொருளாதார அறிஞரும் மாநில வளர்ச்சிக் கொள்கைக்குழு துணைத் தலைவருமான ஜெயரஞ்சன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
தமிழகத்தில் இருக்கும் வலுவான பொது விநியோக முறையால் விலையேற்றம் குறைவாக உள்ளது என ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.

பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன்
தலைமைச் செயலகத்தில் பொருளாதார அறிஞரும் மாநில வளர்ச்சிக் கொள்கைக்குழு துணைத் தலைவருமான ஜெயரஞ்சன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மத்திய அரசின் புள்ளியியல் துறையால் வெளியிடப்படும் டேட்டாவை முன்வைத்து, தமிழ்நாட்டில் விலையேற்றம் கட்டுக்குள் இருப்பதாகவும், அதற்கு தமிழ்நாட்டில் வலுவாக இருக்கும் பொது விநியோகத் திட்டமே காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் டேட்டா
ஜெயரஞ்சன் பேசுகையில், "நுகர்வோருக்கான உணவுப் பொருட்கள் விலைவாசி உயர்வு குறித்து அவ்வப்போது புள்ளி விவரங்கள் மத்திய அரசின் புள்ளியியல் துறையால் வெளியிடப்படுகின்றது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தென் மாநிலங்களில் உணவுப் பொருட்கள் விலையேற்றம் குறைவாக உள்ளது.

தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு மிகக் குறைவு
இந்திய அளவில் உணவுப் பொருட்களின் விலைவாசி ஏற்றம் 7.6 சதவீதமாக ஆக உள்ளது. தமிழ்நாட்டில் விலையேற்றம் 3.1 சதவீதம் அளவுதான் உள்ளது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென்மாவட்டங்களில் உணவுப் பொருள் விலையேற்றம் 5 சதவீதத்திற்கு குறைவாகவே உள்ளது.

குறைவுக்கு காரணம் இதுதான்
அதற்குக் காரணம் பொது விநியோக முறையே ஆகும். பருப்பு, பாமாயில் கொடுக்கும்போது உணவிற்கான செலவை கணிசமான முறையில் குறைகின்றது. ஒரு மாநிலத்தில் அனைவருமே சந்தையைச் சார்ந்திருக்கும்போது டிமாண்ட் காரணமாக விலை ஏறும். கணிசமான மக்கள் பொது விநியோகத் திட்டத்தில் பயன் பெறுவதால் சந்தையில் கூட்டம் குறைகிறது. இதனால், விலைவாசி தானாக குறையும்.

சிறப்பான பொது விநியோக முறை
தமிழ்நாட்டில் பொது விநியோகத்த் திட்டத்திற்காக அரசு ரூ.5000 கோடி செலவு செய்கிறது. அரிசிக்கு மட்டும் மானியமாக ரூ. 2,205 கோடி கொடுக்கப்படுகின்றது. பருப்பிற்கு மட்டும் ரூ. 1,505 கோடி ஆண்டொன்றுக்கு மானியமாக தமிழ்நாட்டில் கொடுக்கப்படுகின்றது. பொது விநியோகத் திட்டமானது சாமானியர்களை விலைவாசி ஏற்றத்திலிருந்து 30-35% பாதுகாக்கும். பொது விநியோகத் திட்டத்தில் தானியங்கள், அரிசி, எண்ணெய் முக்கியமானது.

அடித்தட்டு மக்களை பாதுகாக்கும் திட்டம்
பொதுவிநியோக திட்டத்தை தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அடித்தட்டு மக்களை பெருமளவில் இந்த ரேஷன் திட்டம் பாதுகாக்கும். அவர்கள் தங்கள் அன்றாட சம்பளத்தை உணவுப் பொருட்களுக்கு அதிகளவில் பயன்படுத்த வேண்டியிருக்கும். இல்லையெனில் அவர்கள் பட்டினி கிடக்கும் சூழல் ஏற்படும். பொது விநியோக திட்டம் அவர்களைப் பாதுகாத்து விலை ஏற்றத்தைக் கட்டுக்குள் வைக்கிறது." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications