புதிய வருமான வரி முறையில் ரூ.7.75 லட்சம் வரை வரி செலுத்த தேவையில்லை.. பொருளாதார நிபுணர்கள் விளக்கம்
சென்னை: வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 87ஏ-ன் கீழ் தள்ளுபடி பெறும் போது புதிய வரி விகிதத்தில் ரூ.7 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி செலுத்த தேவையில்லை. இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் நிரந்தர கழிவுரூ.50,000-ல் இருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால், ரூ.7.75 லட்சம் வரை வரி செலுத்த தேவையில்லை என்று பொருளாதார நிபுணர்கள் கூறினார்கள்.
நேற்று அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. அதேநேரம் புதிய வரி முறையில் வருமான வரி அடுக்குகள் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஆண்டுக்கு ரூ,3 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி விலக்கு தொடர்கிறது. ரூ.3 லட்சம் முதல் ரூ,7 லட்சம் வரையில் 5 சதவீதம், ரூ.7 லட்சம் முதல் ரூ,10 லட்சம் வரை 10 சதவீதம், ரூ.10 லட்சம் முதல் ரூ,12 லட்சம் வரை 15 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 20 சதவீதம், ரூ.15 லட்சத்துக்கு மேல் 30 சதவீதமும் வருமான வரி விதிக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மாத சம்பளதாரர்கள் புதிய வரி முறையில் பெறும் நிலையான கழிவு ரூ,50 ஆயிரத்தில் இருந்து ரூ,75 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. இதைப்போல குடும்ப ஓய்வூதியதாரர்களின் கழிவு பலன்களும் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 4 கோடி மாத ஊதியதாரர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பலன்பெறுவார்கள் என்றும் வருமான வரிமுறையில் அறிவிக்கப்பட்டுள்ள மாற்றங்களால் புதிய வரி முறையில் மாத ஊதியதாரர்கள் ஆண்டுக்கு ரூ,17,500 வரை சேமிக்க முடியும் என்றும் இந்த புதிய வரி அடுக்கு முறைகள் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் (மதிப்பீட்டு ஆண்டு 2025-26) அமலுக்கு வருவதாகவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் தனிநபர் வருமான வரி முறையில் பழைய வரி விகிதத்தில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு 2.5 லட்சமாக நீடிக்கிறது. மத்திய அரசு நேற்றைய பட்ஜெட்டில் எந்த மாற்றத்தையும் அறிவிக்கவில்லை. ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 5 சதவீதம் வரி, ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 20 சதவீதம் வரி, ரூ.10 லட்சத்துக்கு மேல் 30% வரி என்ற விகித முறை அப்படியே தொடருகிறது.
புதிய வருமான வரிமுறையில் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை 5% வரி என்று இருந்ததை 3 முதல் 7 லட்சம் வரை ஐந்து சதவீதம் வரி என்றும், ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை 10% வரி என்று இருந்ததை ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 10% வரி என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ரூ.9லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 15% வரி என இருந்ததை ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 15 சதவீதம் என மாற்றி உள்ளது. ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 20% வரி என இருந்ததையோ அல்லது ரூ.15 லட்சத்துக்கு மேல் 30% வரி என்பதையோ அரசு மாற்றவில்லை .
புதிய வரி விகிதத்தில் நிரந்தர கழிவு ரூ.50,000-ல் இருந்து ரூ.75,000 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ள காரணத்தால் தனிநபர்களுக்கான புதிய வருமான வரி முறையில் ரூ.7.75 லட்சம் வரை வரி செலுத்த தேவையில்லை என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர். வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 87ஏ-ன் கீழ் தள்ளுபடி பெறும்போது புதிய வரி விகிதத்தில் ரூ.7 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி செலுத்த தேவையில்லை என்று இருந்தது.
தற்போதைய மத்திய பட்ஜெட்டில் நிரந்தர கழிவுரூ.50,000-ல் இருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. எனவே ரூ.7.75 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வருமான வரி செலுத்த தேவையில்லை. ஆண்டு வருமானம் ரூ.7.75 லட்சத்தை தாண்டிவிட்டால் ரூ.3 லட்சம் வரை மட்டுமே வரிவிலக்கு வழங்கப்படும். ரூ.3 லட்சத்திற்கு மேல் உள்ள சம்பளத்திற்கு அல்லது வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும்.
அதன்படி பார்த்தால் புதிய வரி விகிதத்தின்படி ரூ.8.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு ரூ.27,500 வருமான வரி செலுத்த வேண்டியது வரும். எனவே மாத சம்பளதாரர்கள், ஆடிட்டர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைப்படி வருமான வரிமுறையை தேர்வு செய்வது நல்லது.












Click it and Unblock the Notifications