வருமான வரி செலுத்திவிட்டால் மட்டும் போதுமா? செந்தில் பாலாஜி கேஸில் அமலாக்கத் துறை பிடித்த பாயிண்ட்!
சென்னை: செந்தில் பாலாஜி வருமான வரி செலுத்திவிட்டால் மட்டும் போதுமா என அமலாக்கத் துறை தரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.
செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் எந்த ஆதாரத்தையும் திருத்தவில்லை என அமலாக்கத் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டது.

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக தாக்கல் செய்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், இரண்டாவது நாளாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, செந்தில் பாலாஜி தரப்பு வாதத்துக்கு பதிலளித்து, அமலாக்கத் துறை தரப்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் வாதிட்டார்.
அப்போது அவர், போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, பதவிக்கு ஏற்றவாறு, 2 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரை என மொத்தம், 67 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு மூன்று வழக்குகள் தொடர்ந்துள்ளது. இந்த வழக்குகளில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள், சென்னை எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ளன. அந்த ஆதாரங்கள், உயர் நீதிமன்ற உத்தரவின்படி மட்டுமே அமலாக்கத் துறை பெற்றது. அந்த ஆதாரங்கள் திருத்தப்படவில்லை என விளக்கினார்.
முந்தைய ஜாமீன் மனு தள்ளுபடிக்கு பிறகு வழக்கில், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தவிர, வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதுவும் ஜாமீன் மனு விசாரணை துவங்குவதற்கு ஒரு நாள் முன் தான் ராஜினாமா செய்துள்ளார். இருப்பினும் இன்னமும் அவர் செல்வாக்கான நபராகவே உள்ளார். ஏற்கனவே பணம் கொடுத்தவர்களிடம் செந்தில் பாலாஜி சமரசம் செய்திருக்கிறார்.
வழக்கில் சாட்சிகள் இன்னும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படாத நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால், சாட்சிகளை கலைக்க கூடும். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சண்முகம், சகோதரர் அசோக்குமார் இன்னும் தலைமறைவாக உள்ளனர் என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வாதிட்டார்.
வழக்கில் உள்ள ஆதாரங்கள் அனைத்தும் மற்றொரு புலனாய்வு அமைப்பால் சேகரிக்கப்பட்டவை. அவை 2020ல் பெறப்பட்டு, தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அமலாக்க துறை எந்த ஆதாரத்தையும் உருவாக்கவும் இல்லை; திருத்தவும் இல்லை. மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்கு ஆவணங்களை மட்டுமே நம்பியுள்ளது எனக் குறிப்பிட்டார்.
வருமான வரி செலுத்தி விட்டால் மட்டும் போதாது. 10 ஆண்டுகள் 68 லட்சம் ரூபாய் ஊதியமாக பெறப்பட்டுள்ளது. அது ரொக்கமாக டெபாசிட் செய்யப்படாது. சட்டவிரோத பண பரிமாற்றம் என்பது ஒரு கோடியே 34 லட்சம் ரூபாய் மட்டும் அல்ல. மீதமுள்ள தொகை மறைக்கப்பட்டுள்ளது என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வாதிட்டார்.












Click it and Unblock the Notifications