ED காவலுக்கு எதிர்ப்பு! ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
சென்னை: அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார். இந்நிலையில் தான் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அவர் அமலாக்கத்துறையில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது இதயத்தில் 3 அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு தனியார் மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
கடந்த சில வாரங்களாக மருத்துவமனையில் ஓய்வில் இருந்த செந்தில் பாலாஜி நேற்று சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். வரும் 26ம் தேதி வரை அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளதால் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு முதல் வகுப்பு அறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் கைதான செந்தில் பாலாஜியை விடுவிக்கக்கோரி அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது.
இதையடுத்து 3வது நீதிபதிக்கு வழக்கு சென்றது. 3வது நீதிபதி வழக்கை விசாரித்த நிலையில் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது எனக்கூறினார். இதனால் விரைவில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளது.
இதற்கிடையே தான் அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க உயர்நீதிமன்றம் வழங்கிய அனுமதிக்கு எதிராக அந்த மனு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீடு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications