அடுத்த “டார்கெட்” தலைமை செயலகம்.. அமைச்சர் பொன்முடி அறைக்கு சீல் வைக்க ED முடிவு! நாளை சோதனையா?
சென்னை: அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பொன்முடியின் அலுவலகத்துக்கு சீல் வைக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்று உள்ளனர்.
செம்மண் குவாரி ஒதுக்கீட்டில் முறைகேடு செய்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக கூறி தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீது கடந்த 2011 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக இன்று காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர்.

துணை ராணுவத்தின் பாதுகாப்புடன் விழுப்புரம் சண்முகபுரம் காலணியில் உள்ள அமைச்சர் பொன்முடி வீடு, சென்னை சைதாபேட்டையில் இருக்கும் அவரது வீடு, அவரது மகனும் கள்ளக்குறிச்சி திமுக எம்பியுமான கௌதம் சிகாமணி அலுவலகம், பொன்முடிக்கு சொந்தமான கல்லூரி, பொன்முடியின் இளைய மகனும் மருத்துவரும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவருமான அசோக் சிகாமணிக்கு சொந்தமான மருத்துவமனை என அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடைபெற்றது.
சென்னை சைதாப்பேட்டை இல்லத்தில் அமைச்சர் பொன்முடி, மனைவி, மகன் அசோக் சிகாமணி ஆகியோர் இருக்கும்போதே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடர்ந்தனர். அத்துடன் வீட்டில் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். வங்கி அதிகாரிகளும் பொன்முடி வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை செய்தனர்.
ரூ.70 லட்சம் ரொக்கம், 10 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர், முக்கிய ஆவணங்கள் போன்றவை இந்த சோதனையில் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து அமைச்சர் பொன்முடியை விசாரணைக்காக நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அதிகாரிகள் அழைத்து சென்றனர்.
அங்கு சுமார் 3 மணி நேரமாக அமைச்சரிடம் அமலாக்கத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே 15 மணி நேரம் கழித்து விழுப்புரம் சண்முகபுரம் காலணியில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டில் நடைபெற்ற வரும் சோதனை முடிவுக்கு வந்தது. அதே நேரம் விழுப்புரத்தில் பொன்முடியின் கல்வி நிறுவனங்கள், சைதாப்பேட்டை வீட்டில் சோதனை தொடர்ந்து வருகிறது.
இதற்கிடையே சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இரவே தலைமைச் செயலகத்தில் உள்ள பொன்முடியின் அலுவலகத்துக்கு சீல் வைக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் விரைந்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications