TMB முன்னாள் தலைவர் நேசமணிமாறன் முத்துவின் ரூ.293 கோடி சொத்துகள் முடக்கம்.. என்ன காரணம்?
சென்னை: சட்டவிரோதமாக வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்தது தொடர்பாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் நேசமணிமாறன் முத்துவின் ரூ.293.91 கோடி மதிப்பிலான பங்குகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
அதாவது கடந்த 2014-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 46 ஆயிரம் பங்குகளை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில், முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறையிடம்
புகார் தெரிவித்தது.
TMB வங்கியில் வேலைவாய்ப்பு.. ஏராளமான பணியிடம்.. நல்ல சம்பளம்.. தவற விடாதீங்க!
சட்டவிரோதமாக முதலீடு
கடந்த 2007, 2011 மற்றும் 2012 ஆகிய காலகட்டங்களில் பங்குகள் முறைகேடாக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கியுள்ளதாகவும், தூத்துக்குடி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மற்றும் மும்பை ஸ்டாண்டர்ட் ஸ்டேட் வங்கியும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் எம்ஜிஎம் மாறன் என்கிற நேசமணி மாறன் முத்து இதில் முக்கிய உடந்தையாக இருந்ததாகவும் ரிசர்வ் வங்கி அதிரடியான புகார்களை கூறி இருந்தது.
முக்கிய நிர்வாகிகளுக்கு நோட்டீஸ்
இதனை தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணையில் இறங்கியது. முதற்கட்டமாக தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி முக்கிய நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. விசாரணையில் நேசமணி மாறன் முத்து மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் வெளிநாட்டுப் பரிவர்த்தனை மேலாண்மை சட்டத்தை மீறி பங்குகளை ஒதுக்கியது உறுதி செய்யப்பட்டது.
ஏற்கனவே எச்சரிக்கை
தொடர்ந்து அவருக்கு ரூ.35 கோடி அபராதம் விதித்த அமலாக்கத்துறை, அபராதத் தொகை செலுத்த தவறினால் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படும் என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தது. இந்த நிலையில்தான் நேசமணிமாறன் முத்துவின் சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது.
ரூ. 293.91 கோடி சொத்துகள் முடக்கம்
நேசமணிமாறன் முத்துவின் ரூ. 293.91 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. ஃபெமா எனப்படும் வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை மேலாண்மைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கைப்பற்றப்பட்ட சொத்துகள் நான்கு இந்திய நிறுவனங்களில் நேசமணிமாறனின் பெயரில் பங்குகளாக இருந்ததாக தெரிகிறது.