ஆகாஷ் பாஸ்கரன் மாயம்.. அமலாக்கத்துறை வளையத்திற்குள் சிவகார்த்திகேயன்? 3 நடிகர்களை விசாரிக்க திட்டம்!
சென்னை: டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையை தொடர்ந்து நடிகர்கள் சிவகார்த்திகேயன், தனுஷ் மற்றும் சிம்பு ஆகியோரை விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன், தனுஷ் மற்றும் சிம்பு ஆகியோருக்கு ரொக்கமாக பெரிய தொகை கைமாறியதற்கான ஆவணங்கள் அமலாக்கத்துறை வசம் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் அமலாக்கத்துறை கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தியது. 3 நாட்கள் நடத்தப்பட்ட சோதனைகளில், டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் சென்னையில் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீடு, எஸ்என்ஜே நிறுவனம், பராசக்தி படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் வீடு, தொழிலதிபர் தேவக்குமார் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதேபோல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் நண்பராக அறியப்பட்டு வரும் ரத்தீஷ் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் உள்ளிட்டோரிடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டது. அதேபோல் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் வீட்டில் நடத்திய சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களும், தகவல்களும் சிக்கியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆகாஷ் பாஸ்கரனை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் மே 21ஆம் தேதி ஆஜாராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால் ஆகாஷ் பாஸ்கரன் இதுவரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜாராகவில்லை என்று தெரிய வந்துள்ளது. அமலாக்கத்துறை சோதனைக்கு பின் ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாக இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. அதேபோல் வெளிநாட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆகாஷ் பாஸ்கரன் எங்கிருக்கிறார் என்ற தகவலை அமலாக்கத்துறை சேகரித்து வருகிறது.
இந்த நிலையில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் பராசக்தி, இட்லி கடை மற்றும் சிம்புவின் 49 ஆகிய 3 படங்கள் உருவாகி வருகிறது. இந்த 3 படங்களில் நடிப்பதற்காக டாஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தரப்பில் சிவகார்த்திகேயன், தனுஷ் மற்றும் சிம்பு ஆகிய 3 நடிகர்களுக்கும் ரொக்கமாக பெரிய தொகை கைமாறி இருப்பதாக தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் சிவகார்த்திகேயம், சிம்பு மற்றும் தனுஷ் ஆகிய 3 நடிகர்களையும் அமலாக்கத்துறை விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications