சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் திடீர் ட்விஸ்ட்.. சென்னையில் 6 இடங்களில் அமலாக்க துறை சோதனை
சென்னை: சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கத் திருட்டு வழக்கு விசாரணை இப்போது தீவிரமாக நடந்து வருகிறது. இந்த வழக்கில் தலைமை அர்ச்சகர் கண்டரரு ராஜீவரரு என்பவர் சமீபத்தில் தான் கைது செய்யப்பட்டு இருந்தார். இதற்கிடையே இது தொடர்பாக சென்னையில் இப்போது ஆறு இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் இறங்கியுள்ளனர். சென்னை மட்டுமின்றி, கேரளா, பெங்களூரிலும் சோதனை நடைபெறுகிறது.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலக பிரசத்தி பெற்றது. இந்தக் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல லட்சம் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அதிலும் குறிப்பாகக் கார்த்திகை மாதத்தில் பக்தர்கள் விரதம் இருந்து கோயிலுக்கு வருவதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.

தங்க திருட்டு
இந்தச் சூழலில் தான் கடந்த 2019ல் சபரிமலை கோயிலில் தங்கத் திருட்டு நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. அப்போது புனரமைப்புப் பணிகள் நடந்த நிலையில், கருவறை முன்பிருந்த துவார பாலகர் சிலைகள் மற்றும் கதவுகளில் உள்ள தங்கக் கவசங்கள் அப்போது புதுப்பிக்கப்பட்டன. அனைத்திற்கும் தங்க முலாம் பூசப்பட்டு மீண்டும் கோயிலில் அணிவிக்கப்பட்டன. அப்போது தான் தங்கத் திருட்டு நடந்ததாகச் சொல்லப்படுகிறது.
துவார பாலகர் சிலைகளின் தங்கக் கவசம், கருவறை கதவுகளில் இருந்த தங்கம் மாயமாகி இருந்தது. சுமார் 4 கிலோ தங்கம் திருட்டு போனதாகப் புகார்கள் எழுந்தன. கோயிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு இது தொடர்பாகப் புகார் அளித்த நிலையில், அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது.
கைது
அப்போது கேரள உயர் நீதிமன்றமும் இந்த வழக்கு குறித்து விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவிட்டது.. தேவசம் போர்டு முன்னாள் தலைவர், நிர்வாக அதிகாரி உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில், சமீபத்தில் தான் சபரிமலை தலைமை அர்ச்சகர் கண்டரரு ராஜீவரரு என்பவரும் கைது செய்யப்பட்டார். அவருக்கும் தங்கத் திருட்டில் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது.
சோதனை
இதற்கிடையே இது தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் நாடு முழுக்க ரெய்டு நடத்தி வருகிறார்கள். சென்னையிலும்6 இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மட்டுமின்றி கேரளா, பெங்களூரிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். நாடு முழுக்க மொத்தம் 21 இடங்களில் ED அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். திருவனந்தபுரத்தில், தேவஸ்வம் வாரியத்தின் தலைமையகத்திலும், முன்னாள் தேவஸ்வம் வாரியத் தலைவர் பத்மகுமாரின் இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்கள் சோதனையை ஆரம்பித்துள்ளனர்.
சென்னையில் ரெய்டு ஏன்
2019ஆம் ஆண்டில், 42.8 கிலோ எடையுள்ள தங்கப் பூசப்பட்ட சிலைகள் புனரமைப்புப் பணிகளுக்காகக் கோயிலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டன. அவை திரும்பக் கொண்டுவந்தபோது, அவற்றின் எடை 38.2 கிலோவாகக் குறைந்து, சுமார் 4.5 கிலோ தங்கம் காணாமல் போயிருந்தது. கோயில் காவல் தெய்வங்களின் சிலைகள் மற்றும் பிற கோவில் பாகங்கள் சென்னை தனியார் நிறுவனத்திற்குப் புனரமைப்புப் பணிகளுக்காக அனுப்பப்பட்டன. பொதுவாகக் கோயில் வளாகத்திலேயே நடக்கும் இப்பணி, ஏன் வெளியே கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த வழக்கில் இதுவரை 11 பேர் கைதாகியுள்ளனர். ஒப்பந்ததாரர் உண்ணிகிருஷ்ணன் போற்றி, பல்லாரி நகைக்கடை உரிமையாளர், சென்னை நிறுவன உரிமையாளர், முன்னாள் எம்.எல்.ஏ. ஏ. பத்மகுமார் உட்பட மூன்று சி.பி.ஐ.(எம்) தலைவர்கள், மற்றும் கோவிலின் தலைமை அர்ச்சகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமலாக்கத் துறை
சிறப்பு விசாரணைக் குழு இந்தத் தங்கத் திருட்டு வழக்கை விசாரித்து வரும் நிலையில், தனியாக அமலாக்கத் துறையும் காணாமல் போன தங்கத்தின் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம், பினாமிப் பரிவர்த்தனைகளைக் கண்டறிய விசாரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இப்போது பல்வேறு இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications