ஆதரவாய் வந்த தீர்ப்பு.. சூட்டோடு சூடாக இபிஎஸ் செய்த செயல்.. உற்சாகத்தில் தொண்டர்கள்!
சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டரில் பக்கத்தில் பொறுப்பை மாற்றியுள்ளார்.
அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை எதிா்த்து ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், கடந்த ஜூலை 11ல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது. அதிமுகவில் கடந்த ஜூன் 23ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்று தீா்ப்பளித்தாா்.
இதனைத்தொடர்ந்து தனி நீதிபதியின் தீா்ப்பை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி சாா்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தா் மோகன் ஆகியோா் முன்பு ஆகஸ்ட் 25ம் தேதி விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனா்.
இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தா் மோகன் அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, தனிநீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்து, கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது. தனி நீதிபதி அளித்த தீர்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக பார்க்கப்பட்ட நிலையில், இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வந்துள்ளது. இதனால் இபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இந்தத் தீர்ப்பின் மூலம் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டரில் பக்கத்தில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்று தனது பயோவை மாற்றியுள்ளார்.
இந்தத் தீர்ப்பின் மூலம் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையிலான மோதலில், எடப்பாடி பழனிசாமியின் கைகள் ஓங்கியுள்ளது. இதனால் அடுத்தடுத்து நடவடிக்கைகளில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றி தோல்வி வீரனுக்கு சகஜம்! ஒரு மாசத்துல என்ன நடக்க போகுதுனு பாருங்க! கொந்தளித்த கோவை செல்வராஜ்!