MLA நிதி எங்கே? விசாரித்தால் இப்படி ஒரு தகவல் வருது எனக்கு; அரசு மீது எடப்பாடி பழனிசாமி பாய்ச்சல்!
சென்னை: சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை இன்னும் ஏன் விடுவிக்கவில்லை என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பாக விடுவிக்க வேண்டிய நிதியை டிசம்பர் பிறந்தும் விடுவிக்காதது ஏன் என்றும் இனியும் தாமதம் வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது;

எம்.எல்.ஏ. நிதி
''சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜுலை மாதங்களிலேயே விடுவிக்கப்பட்டு, சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மக்களிடம் கோரிக்கைகளை நேரடியாக பெற்று உடனடியாக தங்கள் தொகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை அந்தந்த ஆண்டுக்குள் செய்து முடிப்பார்கள். இந்த ஆண்டு டிசம்பர் மாதமே பிறந்துவிட்டது, ஆனால் 2021-2022-ம் ஆண்டுக்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை இந்த விடியா அரசு வழங்கவில்லை.''

எனக்கு கிடைத்த தகவல்
''சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ஏன் இன்னும் விடுவிக்கப்படவில்லை என விசாரித்தால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ளதாகவும், இச்சமயத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியை விடுவித்தால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்நிதியை பயன்படுத்தி தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வார்கள். இதனால் ஆளுங்கட்சியின் வெற்றிவாய்ப்பு பாதிக்கப்படும் சூழல் உருவாகும் என்பதால் இந்நிதியை விடுவிக்கவில்லை என தகவல் கிடைத்துள்ளன.''

ஆளுங்கட்சிப் பிரமுகர்
''உள்ளாட்சித் தேர்தல் நடைபெறக் கூடிய பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அந்தப் பகுதிகளை சேர்ந்த ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் நேரடியாக அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் வழங்குகின்றனர். அரசும் இதற்கு ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, பொதுப்பணித்துறையின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்கிறது. இது அரசின் தீய எண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் இருக்கிறது.''

ஜனநாயக கடமை
''சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை விடுவிக்காமல் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் ஜனநாயக கடமையாற்ற வாய்ப்பளிக்காத மக்கள் நலனில் அக்கறையில்லாத இந்த திமுக அரசு, தற்போது நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அதிகார துஷ்பிரயோகம் மூலம் வெற்றி பெற திட்டமிட்டுள்ளது.'' இவ்வாறு இ.பி.எஸ். தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications